அம்மையப்பன் சந்நிதிக்கு
இடையில் மேற்பக்கத்தில் நங்கையாழ் வீசுவரம்
என்னுங் கோயில் பல்லவகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு
அரசியால் (கி.பி. 1269) எடுப்பிக்கப் பதினாலடிக்
கோலால் பதின்மூன்றரைகுழி விற்றுப் பதினாயிரம்
பொற்காசு பெற்றுக்கட்டியபகுதி இன்று இல்லை.
கிருஷ்ணதேவராயர் (கி.பி. 1516) ஆயிரங்கால் மண்டபத்தையும்,
எதிரிலுள்ள திருக்குளத்தையும், பதினொரு நிலையிலுள்ள
கோபுரத்தையும், வேறுபல திருப்பணிகளையும் அமைத்தமை
அறியப்படுகிறது.
பல்லவமன்னனான
கோப்பெருஞ்சிங்கனும், அவன் மகன் வேணாவுடையானும்
செய்த திருப்பணிகள் மிகப்பல. பூஜைக்கும் திருப்பணிக்குமாக
“அண்ணா மலைநாதர்
தேவதானப்பற்றுக்களும், அண்ணாநாட்டு நாற்பாக் கெல்லைக்
குட்பட்ட நன்செய் புன்செய் ஆக உள்ள நிலத்திற்கு
ஆயம் பாடி காவலால் வந்த நெல்லும் காசாயமும் மற்றும்
எப்பேர்ப்பட்ட பல்லாயங்களும்”
இவன் தானமாக ஈந்தான்.
கல்வெட்டுக்களில்
காணப்பெறும் கோயில் அதிகாரிகள் ஸ்ரீருத்திரர்,
ஸ்ரீமாகேசுரர், ஸ்ரீமாகேசுரக் கண்காணி செய்வார், தானத்தார்,
தானபதி மாகேசுரர், தேவகன்மிகள், கோயிற்கணக்கர்,
ஸ்ரீகாரியஞ்செய்வார் எனப் பலராவர். இவரில் ஸ்ரீமாகேசுரர்,
தர்மசாசனங்கள் ஒழுங்காக நடைபெறக் காரியம்
பார்ப்பவராவர்.
அண்ணாமலைநாதருக்கும்
உண்ணாமுலை அம்மைக்கும் பிச்சதேவர் முதலிய மூர்த்திகட்கும்
திருப்பள்ளி எழுச்சி, சிறுகாலை சந்தி, உச்சிப்போது,
இரவை, அர்த்தசாமம் முதலியகாலங்களில் அமுது முதலியவற்றிற்கு
நிலம் அளித்தமை அறியலாம்.
சில சாஸனங்களில்
பிரமநாயனார் பெரியமடத்து முதலியார், வையந் தொழுவார்
பெரியமடத்து முதலியார், ஊருக்குப் பெரிய மடத்து முதலியார்,
திருவண்ணாமலை உடையார் திருமுற்றத்தே இராஜேந்திரசோழன்
சாலை, காங்கேயன்மடம், அம்மைமடம் முதலியன அறியப்படும்
செய்திகள்.
நெய், மிளகு, உப்பு,
தயிர், அடைக்காய், வெற்றிலை, சீரகம், வாழைப்பழம்,
வாழையிலை முதலியன நெல்லளந்து பெறப்பட்டவை. மங்கையர்க்கரசி
என்னும் நங்கை தன்னாபரணங்களை விற்ற பொருள்கொண்டும்,
நெல்லைக்கொண்டும் ஏரிபுதுக்கி உதவினாள் என்ற செய்தி
கல்வெட்டால் அறியப்படுகிறது.
|