1404. அன்னமலி பொழில்புடைசூ
ழையாற்றெம்
பெருமானை யந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்து மிசையுங்கா
லீசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகிற்
றவநெறிசென்
றெய்துவார் தாழாதன்றே. 11
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
ஆட்படுவீர்களாக. எட்டுத்
தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம்
ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும்
கோயிலையுடையது, பூக்களைச் செண்டுகள் போல்
உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த
காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு
வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.
கு-ரை: தொண்டர்களே! புறச்
சமயிகளின் மொழிகளைக் கேளாதே ஆட்படுங்கள்;
எம் இறைவர் அமருங்கோயில் காவிரி மணிகளைக்
கொணர்ந்து எற்றும் திருவையாறு என்கின்றது.
குற்றுடுக்கை - சிற்றாடை. மிண்டு - குறும்பான உரை.
மேவி - விரும்பி. செண்டு - பூ உருண்டை.
11. பொ-ரை: அன்னப் பறவைகள்
நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும்
திருவையாற்றுப் பெருமானை, அழகிய தண்மையான
சீகாழிப் பதியில் வாழும் சிறப்பு மிக்க,
வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும்
ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய
இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி,
ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக
விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.
கு-ரை: ஐயாற்றெம்பெருமானைச்
சம்பந்த சுவாமிகள் பாடல்களால்
தோத்திரிப்பவர்கள் புகழோடு தேவருலகிற்
செல்வார்கள் என்கின்றது. இசையோடு அமர் உலகு -
தேவருலகு. தாழாது - தாமதியாது.
|