34. சீகாழி
பண் : தக்கராகம்
பதிக எண்: 34
திருச்சிற்றம்பலம்
360. அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே. 1
361. திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே. 2
__________________________________________________
1. பொ-ரை: வலிமை பொருந்திய இடபம்
பொறிக்கப்பட்ட கொடியைத்தனதாகக் கொண்ட
தலைவனாகிய சிவபிரான், மலர் சூடிய கூந்தலை உடைய
உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், கடலால் புடை
சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை இடைவிடாது சென்று
வழிபடுபவர் தூய நெறியில் நிற்பவராவர்.
கு-ரை: இது இறைவன் உமையோடு எழுந்தருளியிருக்கும்
சீகாழியைப் பரவுவார் தூயநெறியார் என்கின்றது.
அடல் ஏறு - வலிமைபொருந்திய இடபம்,
மடல் - பூ. தொடர்பார் - இடைவிடாது தியானிப்பவர்.
2. பொ-ரை: அலைகளோடு கூடிய கங்கையை
முடிமிசைச் சூடிய செல்வனாகிய சிவபிரான் மலைமகளோடு
மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதும், கரையை உடைய நீர்நிலைகளால்
சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை வரிசையான பூக்களைக்
கொண்டு நின்று தூவி வழிபடுமின்.
கு-ரை: காழியை இன்றே மலர்தூவி வணங்குங்கள்
என்கின்றது. நிரையார் மலர் - வரிசையான பூக்கள்.
|