991. சீரூர் சம்பந்தன், ஆரூ ரைச்சொன்ன
பாரூர் பாடலார், பேரா ரின்பமே. 11
திருச்சிற்றம்பலம்
____________________________________________________
11. பொ-ரை: சிறப்புப்
பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூர் இறைவன்மீது பாடிய
உலகம் முழுதும் பரவிய பாடல்களைப் பாடி வழிபட வல்லவர்
இன்பத்தினின்று நீங்கார்.
கு-ரை: முத்தியாகுமே
என முதற்பாட்டில் அருளியவர்கள் அதற்கிடையூறானபிறவி
வினை பாசம் இவைகளையும், இவைகளை நீக்கும் உபாயங்களையும்,
நீங்கியார் எய்து பயனையும் முறையே கூறினார்கள்.
இத்தகைய பாடல்கள் பத்தையும் பயில்வாரும் அத்தகைய
இன்பத்தை எய்துவர்; பேரார்; நிலையாவரெனத் திருக்கடைக்காப்புச்
செய்தருள்கின்றார்கள். சீர் ஊர் - சீகாழி. பாரூர்
பாடல் - உலகமுழுதும் பரவிப் பண்படுத்தும் பாடல். இன்பம்
பேரார் - பெற்ற இன்பத்தினின்றும் மீளார். பேராவின்பப்
பெருவாழ்வெய்துவர் என்பதாம். கீழ்ப்பாடல்களும்
ஆரூரை மலர்தூவ அடையும் பயனை ஐந்துபாடல்களும், தொழுவார் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், வாழ்த்துவார்
எய்தும் பயனை இரண்டு பாடல்களும் பாடற்பயனை
ஒருபாடலும் உணர்த்துகின்றன.
|
நால்வர் நான்மணி மாலை
மகிழ்ச்சி
மிகவுண்டு போலுமெதிர் வந்து
புகழ்ச்சியோடு நீபாடும் போது - நெகிழ்ச்சிமலர்ச்
சந்தையினும் வண்டிரையுந் தண்புகலிச் சம்பந்தா
தந்தையினும் பால்கொடுத்த தாய்க்கு.
பயனாகும்
நல்லாண் பனைக்குவிடத் திற்கு
மயிலாகும் நோய்க்கு மருந்தாம் - உயிராகுஞ்
சிந்துமெலும் பிற்குச்
சிரபுரத்து நாவலன்சம்
பந்த னியம்புதிருப் பாட்டு.
-சிவப்பிரகாச சுவாமிகள். |
|