பக்கம் எண் :

216

உண்டு.

கல்வெட்டு:

     இந்தக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் படியெடுக்கப்
பட்டிருக்கின்றன. முத்துவேங்கடப்ப நாயக்கன் சகம் 1564 இல் (கி. பி. 1642)
தூபாஷ் கிருஷ்ணப்ப நாயக்கன் நலத்திற்காகச் சிதம்பரம் அபிஷேக புரம்
அக்கிராகாரத்திற்கு முத்து வேங்கடப்ப நாயக்கன் காரியத்தர் கோனேரி
செட்டியார் இருபத்தைந்துமா நிலம் தந்தார்.

60. திருநெல்வாயில் அரத்துறை

     விழுப்புரம் - திருச்சி குறுக்குத் தொடர்பாதையில்,
திருப்பெண்ணாகடத்திற்குத் தென்மேற்கே 7 கி. மீ. தூரத்தில் உள்ளது.
விருத்தாசலத்திலிருந்து தொழுதூர் செல்லும் பேருந்துகளில் ஏறிக்கொடிகளம்
என்னும் இடத்தில் இறங்கித் தெற்கே 1 கி. மீ. தூரம் சென்றால் இத்தலத்தை
அடையலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று.

     இறைவர் திருப்பெயர். அரத்துறைநாதர், இறைவி திருப்பெயர்
ஆனந்தநாயகி. சுந்தரமூர்த்தி நாயனார் வண்டார் குழலாள் என்று
கூறியுள்ளார். “வண்டார் குழலாள் மங்கை பங்கினனே” (தி. 7 பதி.3 பா.3)
என்பது அவரது தேவாரப் பகுதி. அரத்துறை என்பது ஆலயத்தின் பெயர்.

     திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை,
முத்துச்சின்னம் இவைகளை அருளிய தலம். மூவர் பாடலும் பெற்றது.
திருப்புகழும் பெற்றது.

     இத்தலம் நிவாநதியின் கரையின்மேல் இருப்பதாக ஞானசம்பந்தர்
குறிப்பித்துள்ளார். “கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண்சோலை
நெல்வாயிலரத்துறையடிகள் தம்மருளே” (தி.2 பதி.226 பா.1) என்பது இவர்
தேவாரப் பகுதி. இங்கே நிவா என்றது வடவெள்ளாறு ஆகும். சுந்தரமூர்த்தி
சுவாமிகள், திருக்குறள். நாலடியார் இவைகளிலுள்ள கருத்து, அடி
இவைகளை இவ்வூர் ஏழாம் திருப்பாடலில் எடுத்து ஆளுகின்றார்.
இத்தலத்துக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம்
ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.