பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)91. திருவடகுரங்காடுதுறை1103

91. திருவடகுரங்காடுதுறை

பதிக வரலாறு:

     திருவின்னம்பர்த் திருக்கோயிலை வணங்கிச் சென்று, வாலியார்
வழிபட்ட வடகுரங்காடுதுறையை அடைந்து, அவ்வழிபாட்டையும் சிறப்பித்துப்
பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: சாதாரி

ப.தொ.எண்: 349 பதிக எண்: 91

 திருச்சிற்றம்பலம்

3778.

கோங்கமே குரவமே கொழுமலர்ப்             

   புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
     திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
     யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா
     ரிடமென விரும்பினாரே.     
         1


     1.பொ-ரை: கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை,
கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை
அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும்
திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி
வீற்றிருந்தருளுபவர்.

     கு-ரை: கோங்கமே, குரவமே - கோங்கமும், குரவமும் எனப்
பொருள் தரலால் ஏகாரம் எண்ணுப்பொருள். கொகுடி முல்லை -
முல்லைவகை. விம்மு - பருத்த, பாதிரியாகிய இம்மரங்களை அடித்துக்
கொண்டு பெருகும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறையைச்
சடைமுடி அடிகளார் இடமென விரும்பினார் என்க.