பக்கம் எண் :

1110திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

புண்ணிய மூர்த்தியான சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும் அழியாத முக்தியுலகை அடைவர்.

     கு-ரை: தாழ் - ஓடிப் பாய்கின்ற. “பள்ளந்தாழுறு புனலில்” (தி.8 திருவாசகம் 25.) இளம் காவிரி (மென்புனலையுடைய காவிரி), இளந்தென்றல் என்பதுபோல. கருது - தியானித்துப் பயனெய்தத்தக்க பாடல். கோழையா அழைப்பினும் - கோழைமிடறோடு பாடினாலும். கோழைமிடறு பாடற் கேலாதது “ கோழைமிடறாக கவிகோளும் இலவாக இசைகூடும் வகையால்” எனவரும் திருவைகாவூர்ப் பதிகத்தாலும் அறிக. (தி.3 ப.71. பா.1.) அழைத்தல் - பாடுதல். அழைத்தல் என்பதற்கு மறு சொல் விளித்தல் என்பது. அதன் பிறிதொரு பொருள் பாடுதல் என்பது. இதனை “கொம்பர் இருங்குயில் விளிப்பன காணாய்” (மணிமேகலை - பளிக்கறை புக்க காதை. 13.) நீடு - என்றும் அழியாத. வானுலகு - முத்தியுலகம்.

திருஞானசம்பந்தர் புராணம்

வடகுரங் காடு துறையில் வாலியார்
     தாம்வழி பட்ட
அடைவுந் திருப்பதி கத்தில் அறியச்
     சிறப்பித் தருளிப்
புடைகொண் டிறைஞ்சினர் போந்து புறத்துள்ள
     தானங்கள் போற்றிப்
படைகொண்ட மூவிலை வேலார் பழனத்
     திருப்பதி சார்ந்தார்.

                                - சேக்கிழார்.