பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)94. திருவெங்குரு1133

3817. வித்தக மறையவர் வெங்குரு மேவிய
       மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
     சித்தம துடையவர் திருவே.             8

3818. மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
       ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
     சீலம துடையவர் திருவே.              9


     கு-ரை: விழ - விழா (விழவு) மல்கும் - தங்கிய, உம்மை அலர் கொடு
தொழ அல்லல் கெடுவது துணிவு - நிச்சயம்.

     8. பொ-ரை: சாமர்த்தியமுடைய, நான்மறைகளைக் கற்றுவல்ல
அந்தணர்கள் நிறைந்த திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, ஊமத்த நன்மலரினைச் சூடியுள்ள, சிவபெருமானே!
ஊமத்தம் மலர் சூடிய உம் திருவடிகளைத் தொழும் சித்தமுடையவர்கள்
எல்லாச் செல்வங்களும் பெற்றவர் ஆவார்.

     கு-ரை: வித்தகம் - சதுரப்பாடு (சாமர்த்தியம்) மறையவர்க்குச் சதுரப்
பாடாவது - பல கடவுளர்க்குத் தலைமை கூறும் அதன் பொருளை நடு
நிலைமையொடு உணர்ந்து, உண்மையிது உபசாரம் இது என உணரும்
வன்மை. மத்த மலர் - பொன்னூமத்த மலர். சித்தம் உடையவர் திரு -
என்றது மோட்ச சாம்ராச்சியத்தை “செல்வன் கழலேத்தும் செல்வம்
செல்வமே” என்றவாறு.

     9. பொ-ரை: மேலான பக்தர்கள் தொழுதெழுகின்ற திருவெங்குரு
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, விடம் தங்கிய
அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானே! விடம் தங்கிய அழகிய
கண்டத்தையுடையவராகிய உம்திருவடிகளைத் தொழுகின்ற நல்லொழுக்கம்
உடையவர்களே பேரின்பம் பெறுவர்.  

     கு-ரை: ஆலம் நன்மணிமிடறு - விடம் தங்கிய நல்ல காளகண்டம்,
சீலம் வழிபாட்டு முறை. அது “பெரும்புலர்காலை மூழ்கிப் பித்தர்க்குப்
பத்தராகி” (தி.4.ப.31.பா.4.) எனும் திருநேரிசையிற் கூறியது முதலியன.