பக்கம் எண் :

1134திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3819. விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
       அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
     உரைமல்கு புகழவ ருயர்வே.            10

  * * * * * * * *                       11

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய
திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே! அரையில்
கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம் இணையடிகளை
நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு அடைவர்.

     கு-ரை: அரைமல்கு புலியதளீரே - அரையிற் கட்டிய புலித்தோலை
உடையீரே. மல்கு - பொருந்திய, இங்குக் கட்டிய என்னும் பொருளில்
வந்தது. உரைமல்கு புகழவர் - வார்த்தையால் உம்மை நிரம்பப்
புகழ்தலையுடையவர். அவர் உயர்வே உண்மையான உயர்வாகும்.

     11. * * * * * * * * *

குறிப்பு: இப்பதிகத்தில் 8,9,10 இப்பாசுரங்களில் ஏனைப் பதிகங்களிற் கூறும்
முறை இல்லை.