3836. |
நெற்றியோர்
கண்ணுடை நெல்வெணெய் மேவிய |
|
பெற்றிகொள்
பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே. 6 |
3837. |
நிறையவர்
தொழுதெழு நெல்வெணெய் மேவிய |
|
கறையணி
மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்அடிக் கீழே. 7 |
6.
பொ-ரை: நெற்றிக்கண்ணை உடையவரும், திருநெல்வெண்ணெய்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும்
பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய
வருமாகிய சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய
உமாதேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த
அறிஞர்களின் கடமையாகும்.
கு-ரை:
பெற்றி கொள் - அடியவர்க்கருள்வதையே தன்மையாகக்
கொண்ட. பிறைநுதலீர் - பிறைபோன்ற நெற்றியையுடைய
உமையம்மையாரை. உரையீர், பிறைநுதல் - அன்மொழித்தொகை. பேணுதல்
- பாராட்டி நிட்டை கூடுதல், கற்றறிவோர்கள் தம் கடன் - ஞான
நூல்களைக் கற்றறிந்த அறிஞர்கள் கடமையாகும். கல்வியறிவிற்குப் பயன்
கூறியவாறு.
7.
பொ-ரை: நிறையுடையவர்கள் தொழுது எழுகின்ற
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானே! அவ்வாறு விடமுண்ட
கறுத்த கண்டத்தையுடைய உம்மைத் தரிசிப்பவர்கள் உம் திருவடிக்கீழ்
என்றும் வீற்றிருப்பர்.
கு-ரை:
நிறையவர் - காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும்
ஒழுக்கம் உடையவர். (களவியலுரை) உம்மைக் காண்பவர் ...... கீழே
என்றது, அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே, அறிவுதனை யருளினால்
அறியாதே அறிந்து ...... குழைந்திருப்பையாயின் ..... ஆயே (சிவஞானசித்தி
சுபக்கம். சூத்.8.30) என்ற சாத்திரக் கருத்து.
|