பக்கம் எண் :

1154திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3854. விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
  சதிவழி வருவதொர் சதிரே
சதிவழி வருவதொர் சதிருடை யீருமை
அதிகுணர் புகழ்வது மழகே.                 2

3855. விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
  வரைமிசை யுறைவதும் வலதே
வரைமிசை யுறைவதொர் வலதுடை யீருமை
உரைசெயு மவைமறை யொலியே.              3


     2. பொ-ரை: வேதங்களில் விதிக்கப்பட்ட ஒழுக்க நெறிகளைப் பின்
பற்றி வாழும் அந்தணர்கள் நிறைந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருள்கின்றவரும், தாளத்துக்கு ஏற்ப அழகாகத் திருநடனம்
புரிபவருமான சிவபெருமானே! தாளத்திற்கு ஏற்பத் திருநடனம் புரியும்
பெருமையுடைய உம்மைச் சத்துவகுணமுடைய ஞானிகள் போற்றிப் புகழ்வது
சிறப்பானது.

     கு-ரை: விதிவழி மறையவர் - விதிவழியில் ஒழுகும் மறையவர்.
சதிவழி - தாள ஓத்தின்படி. நடம் வருவது - நடித்து ஆவர்த்தம் வருவதும்.
ஓர் சதிரே - ஒரு அழகே. அதிகுணர் - சத்துவகுணம் உடையோராகிய
ஞானிகள். புகழ்வதும் ஒரு அழகே. சதிர் - இங்க அழகென்னும் பொருளில்,
அச்சொற்குப் பொருள் அனைத்தும் இங்கு அழகென்னும் இங்கு ஏற்பதிக.
அதி என்பது மிகுதிப்பொருளது ஆயினும் இங்குச் சிறப்பு என்னும்
பொருளில் வருவதால் சத்துவ குணம் எனப்பட்டது. குணர்:- மரூஉ.

     பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர்
பெருமையுடைய கயிலைமலையில் வாழ்வதும் சாமர்த்தியமே. கயிலை
மலையில் வாழும் பெருமையுடைய உம்மைப் போற்றிப் புகழ்வன
வேதங்கள்.

     கு-ரை: விரை - வாசனை. ஒரு வரை என்றது கயிலைமலையை.
வலது - திறப்பாடுடையது. வன்மை என்னும் பகுதியடியாகப் பிறந்த குறிப்பு
வினை முற்று. ஈற்றடியின் பொருளாவது:- நீரே பொருளாந்தன்மையை
உலகிற்கு எடுத்து உரைப்பவை வேதங்களே. அவை வாசகம். அவற்றின்
வாச்சியம் அடிகளீர் என்பது குறிப்பெச்சம்.