பக்கம் எண் :

1264திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4015. மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே
       மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே
     வேதம தோதுவர் மேன்மதியே
பொய்த்தலை யோடுறு மத்தமதே
     புரிசடை வைத்தது மத்தமதே
வித்தக ராகிய வெங்குருவே
     விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே.       4


அருளியவர். போதம் அமரும் உரைப்பொருளே - சிவஞானக் கருத்தடங்கிய
உபதேச மொழியின் பொருளாயுள்ளவன்.

     4. பொ-ரை: கருநிறமுடைய நஞ்சைக் கக்கும் பாம்பை மகிழ்ந்து
இடுப்பில் அணிந்துள்ளவர். திருநீற்றினையே சந்தனம் போல் உடம்பில்
பூசியவர். அவர் தலைமேல் விளங்குவது சந்திரனே. அவர் வேதம்
அருளியது உயிர்கட்கு மேலான ஞானம் அருளவே. மண்டையோடு ஏந்தி
மயானத்தில் விளங்குபவர். முறுக்குண்ட சடையில் அவர் அணிந்துள்ளது
ஊமத்த மலரே. வித்தகராகிய அப்பெருமான் எம் குரு ஆவார். அவர்
விரும்பி வீற்றிருந்தருளுவதும் திருவெங்குரு என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: மைத்திகழ் நஞ்சு உமிழ்மாசுணமே - கரிய நிறம் விளங்கும்
நஞ்சைக் கக்கும் பாம்பே. மகிழ்ந்து அரை - இடுப்பில் சேர்வது அரை
ஞாணாகவும் கோவணமாகவும் சேர்வது. மாசு(ண்)ணமே மெய்த்து உடல்
பூசுவர் - சிறந்த திருநீற்றையே உடம்பின்மேற் பூசுவதாகிய சந்தனமாகத்
திருமேனியிற் பூசுவர். சுண்ணம், பொடி, திருநீறு. மெய்த்து - உடம்பிற்
பூசுவதாகிய சந்தனத்தைக் குறித்தது, “சாந்தமும் வெண்ணீறு” என்ற
திருவிசைப்பாவின் கருத்து. மேல் மதியே - (தலை) மேல் (இருப்பதும்)
சந்திரனே. மேல் மதியே வேதமது ஓதுவர் - மேலான புத்தியைத் தரும்
கருத்துக்களை வேதம் முதலிய நூல்களால் ஓதியருளியவர் (அவ்வாறு
ஓதியருளும்) வித்தகர் ஆகிய எம் குருவே. சமர்த்தராகிய எம் குருநாதன்
விரும்பி அமர்ந்தனர். வெங்குருவே - வெங்குருவென்றும் தலத்தில் விரும்பி
அமர்ந்தனர்.