பக்கம் எண் :

1274திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

114.திருவேகம்பம்

பதிக வரலாறு:

     பெறுதற்கு அரிய பேற்றை உலகம் உய்யவேண்டிப் பெற்றருளிய
பிள்ளையார், அறப்பெருஞ் செல்வக் காமக் கோட்டம் அணைந்து
இறைஞ்சித் திருவேகாம்பரத்து அமர்ந்த செழுஞ்சுடரைத் தப்பாது
உள்ளுருகிப் பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.

திருவியமகம்
பண்: பழம்பஞ்சுரம்

ப.தொ.எண்:372
பதிக எண்: 114

திருச்சிற்றம்பலம்

4024. பாயுமால்விடை மேலொரு பாகனே
       பாவைதன்னுரு மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே
     சோதிமாலெரி வேதத் துவனியே
ஆயுநன்பொரு ணுண்பொரு ளாதியே
     யாலநீழ லரும்பொரு ளாதியே
காயவின்மதன் பட்டது கம்பமே
     கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே.        1


     1. பொ-ரை: இறைவர் பாய்ந்து செல்லும் பெருமையுடைய இடபத்தைச்
செலுத்துபவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர்.
தேவர்கள் போற்றுகின்ற வேதத்தின் தொனியானவர். சுடர்விட்டு எரியும்
வெம்மையுடைய வேள்வித்தீ ஆனவர். ஆராயத்தக்க நல்ல கருத்துக்கள்
எல்லாவற்றிலும் நுட்பமான கருத்தாக விளங்குபவர். ஆலநிழலின் கீழ்த்
தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்கட்கு அரும்பொருள்
உரைத்த முதல்வர். போர்புரிய வந்த வில்லையுடைய மன்மதன் முதற்கண்
அடைந்தது நடுக்கமேயாம். நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் திருக்கச்சியேகம்பமே.

     கு-ரை: பாயும் மால் விடைமேல், ஒரு பாகன் - செலுத்துபவன்.