பக்கம் எண் :

520திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2979. தொடைமலி யிதழியுந் துன்னெ ருக்கொடு
  புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல் விசய மங்கையே.     4

2980. தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
  ஏடமர் கோதையோ டினித மர்விடம்
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
வேடம துடையணல் விசய மங்கையே.        5


     4. பொ-ரை: கொன்றை மாலையும், நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட
எருக்க மாலையும் பக்கங்களிலே விளங்கும் சடைமுடியுடைய அடிகளாகிய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் அழகிய நகரம், மழுவை ஆயுதமாக
உடையவரும், பசிய கண்களையுடைய வலிமையுடைய வெண்ணிற எருதுவை
கொடியாக உடைய சிவபெருமானின் திருவிசயமங்கை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: இதழி - கொன்றை. துன் - நெருங்கிய. எருக்கு - வெள்
எருக்கம் பூமாலை. புடை - பாகம். படை மலி மழு - “படைமலிந்த மழு”
என அப்பர் மூர்த்திகள் திருவாக்கிலும் இத்தொடர் வருதல் காண்க. மூரி
- வலிமை. வெள்விடை. மூரி என்ற சொல் மலையாளத்தில் - எருத்துக்கு
வழங்கும்.

     5. பொ-ரை: இறைவன் இடப்பாகத்தில் தோடணிந்த காதினன். நன்கு
குழையத் திருநீறு பூசிய மேனியன். காட்டிலே வசிக்கின்ற பெரிய யானை
கதறும்படி அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட ஒப்பற்ற
திருக்கோலத்தையுடைய அண்ணலான சிவபெருமான், பூவிதழ்களை அணிந்த
கூந்தலையுடைய உமாதேவியொடு இனிது வீற்றிருக்கும் இடம் திருவிசயமங்கை
என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: ஏடு - பூ இதழ். கோதை - கூந்தல், ஏடு அமர்
கோதை-உமாதேவியார்; அன்மொழித்தொகை. பன் மொழித் தொடர். மாகரி
கதறப் போர்த்தது, இங்கு (கதற) உரித்து என ஒரு சொல் வருவிக்க. கரி
போர்த்தது ஓர் வேடம், யானைத்தோலைப் போர்த்த கோலம். அ(ண்)ணல்
- தலைவன்.