பக்கம் எண் :

556திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

 23. திருவிற்கோலம்

பதிக வரலாறு:

     தொண்டை நாட்டுத் திருவூர்களுள் ஒன்றான திருக்கூகத்திலுள்ள
திருவிற்கோலத்தைத் திருத்தொண்டர் பலர் சூழப்பணிந்து திரிபுரம்
எரித்தபடி பாடியருளிய பொருட் பதிகத் தொடைமாலை இது.

பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்: 281   பதிக எண்: 23

திருச்சிற்றம்பலம்

3042. உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
  திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.      1

3043. சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில்
  உற்றதோர் எரியினன் ஒரு சரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே.        2


     1. பொ-ரை: அழகே உருவான உமாதேவியோடு ஒன்றிநின்ற,
செல்வரான சிவபெருமான் தம் சடைமுடியில் திங்களும், கங்கையும்
சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து
போர்க்கோலம் பூண்டு வில்லேந்தி, அப்பெருமான் வீற்றிருந்தருளுகிற
இடம் திருவிற்கோலம் ஆகும்.

     கு-ரை: உரு - அழகு. உருவின் ஆர் - அழகினால் நிரம்பிய.
உமையொடும் ஒன்றி நின்றது. ஓர் திருவினான் - வேறறக் கலந்து நின்ற
செல்வத்தன். “அவளால்வந்த வாக்கம் இவ் வாழ்க்கை யெல்லாம்”
(சிவஞான சித்தியார். சூ1.69.) திங்கள் கங்கையான் - திங்களோடு அணிந்த
கங்கையையுடையவன்.

     2. பொ-ரை: சிறிய இடையையுடைய உமாதேவியைத் தம்
திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, அழகிய கையில் நெருப்பு