பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)36. திருக்காளத்தி639

3182. ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனம்
  சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.     2

3183. கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
  மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை யடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.     3


     2. பொ-ரை: ஆல், மா, குங்கும மரம், சந்தனம் ஆகிய மரங்களும்,
மிகுதியான மயிற்பீலியும், சண்பகமும் அலைகளால் தள்ளப்பட்டுப்
பருவக்காலங்களில் நிறைகின்ற பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில்
அமைந்துள்ள திருக்காளத்தி என்னும் திருத்தளத்தில் வீற்றிருந்தருளும்
நீலகண்டனான இறைவனை எவ்வகையில் நினைந்து வழிபடுதல்
பொருந்துமோ அத்தன்மையில் நினைந்து வழிபடுதல் நம் கடமையாகும்.

     கு-ரை: ஆலம், மா, மரவம் ஓடு. சாலம் - மரவிசேடம். காலம் -
பருவக் காலங்களில். ஆர் - நிறை(ந்தோடு)கின்ற, ‘காரூர்புனல் எய்திக் கரை
கல்லி’ என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாக்கு. நினையும் ஆ(று)
நினைவது; நினைவீர்களாக, வியங்கோள். நினையுமாறு நினைவதாவது -
“நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே.” (தி.4 ப.23
பா.9); “உற்றவரும் - உறுதுணையும் நீயேயென்றும், உன்னையல்லால் ஒரு
தெய்வம் உள்கேன் என்றும்” (தி.6 ப.31 பா.7); “பொதுநீக்கித்
தனைநினையவல்லோர்க்கு” (தி.6 ப.1 பா.5)

     3. பொ-ரை: கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில் ஆகிய
மரங்களைத் தள்ளிக் கொண்டுவரும் பொன்முகலி ஆற்றின் கரையில்
வீற்றிருக்கும் காளத்திநாதரின் திருவடிகளைத் தொழுது போற்ற, பெருகிவரும்
கொடிய துன்பம் கெடும். முத்திப்பேறு எளிதாகக் கைகூடும்.

     கு-ரை: வீங்கு - வளர்ந்து வருகிற. வெந்துயர் - கொடிய துயர்.
கன்மங்கள்; காரணத்தைக் காரியமாக உபசரித்தார்.