பக்கம் எண் :

672திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3235. கலியார்கச்சி, மலியேகம்பம்
  பலியாற்போற்ற, நலியாவினையே.       3

3236. வரமார்கச்சிப், புரமேகம்பம்
  பரவாவேத்த, விரவாவினையே.         4

3237. படமார்கச்சி, இடமேகம்பத்
  துடையாயென்ன, அடையாவினையே.     5

3238. நலமார்கச்சி, நிலவேகம்பம்
  குலவாவேத்தக், கலவாவினையே.        6


     3. பொ-ரை: விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன் எப்பொழுதும்
விளங்கும் கச்சியில் வீற்றிருந்தருளுகின்ற திருவேகம்பநாதரைப் பூசைக்குரிய
பொருள்களைக் கொண்டு பூசை செய்து போற்றி வழிபடத் தீவினையால்
வரும் துன்பம் இல்லை.

     கு-ரை: கலி ஆர் - ஓசைமிக்குடைய கச்சி, இதனை 'மலிதேரான்'
என்ற தண்டியலங்கார உதாரணச் செய்யுளாலும், பெரிய புராணத்தாலும்
அறியலாம். பலி - பூசைக்குரிய பொருள்; காரிய ஆகுபெயர்.

     4. பொ-ரை: தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வேண்டிய வரங்களை
நல்கும் தெய்வத்தன்மையுடைய நகர் காஞ்சிபுரம் ஆகும். இத்திருத்தலத்தில்
திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்ற வினை தொடராது நீங்கும்

.      கு-ரை: பரவா - பரவி, துதித்து, உடன்பாட்டு வினையெச்சம்.
கச்சிப்புரம் - காஞ்சிபுரம்.

     5. பொ-ரை: சித்திர வேலைப்பாடுகளையுடைய அழகிய கச்சியை
இடமாகக் கொண்டு திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் எங்கள்
தலைவனே என்று போற்ற வினை வந்து சாராது.

     கு-ரை: படம்-மாடங்களில் ஆடும் கொடியினையுடைய. உடையாய் -
தலைவனே. என்ன வினை அடையா.

     6. பொ-ரை: நலம் தரும் கச்சிநகரில் விளங்குகின்ற திருவேகம்பத்தை
அன்பால் அகமகிழ்ந்து போற்றி வணங்க வினை நீங்கும்.