பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)43. சீகாழி683

43. சீகாழி

பதிக வரலாறு:

     பதிகவரலாறு இல்லாதவற்றுள் இதுவும் ஒன்று.

பண்: கௌசிகம்

ப.தொ.எண்:301   பதிக எண்: 43

திருச்சிற்றம்பலம்

3255. சந்த மார்முலை யாடன கூறனார்
  வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.           1

3256. மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத்
  தேனி டங்கொளுந் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டெ னுச்சியி னிற்பரே.         2


     1. பொ-ரை: இறைவர் அழகிய திருமுலைகளையுடைய
உமாதேவியாரைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். வெந்த
திருவெண்ணீற்றினைப் பூசிய திருமேனி உடையவர். நறுமணம் கமழும்
சோலைகள் சூழ்ந்த சீகாழியுள் வீற்றிருந்தருளிய என் தந்தையாராகிய
சிவபெருமானின் திருவடிகள் என் மனத்தில் நன்கு பதிந்துள்ளன.

     கு-ரை: முலையாள் தனகூறனார்; தன - தன்னதாகிய. இது குறிப்புப்
பெயரெச்சம். கந்தம் - நறுமணம். ஈற்றடி, திருக்காளத்தி முதற் பாட்டின்
(தி.3ப.36பா.1.) ஈற்றடியிலும் சிறிது மாறி வருகிறது.

     2. பொ-ரை: மானை இடக்கரத்தில் ஏந்திய சிவபெருமான் நீண்ட
சிவந்த சடைமுடியின்மீது, தேன் துளிக்கும் கொன்றைமாலையை அணிந்தவர்.
நறுமணம் திகழும் குளிர்ந்த வயல்களையுடைய சீகாழியில் வீற்றிருந்தருளும்
அப்பெருமான் இந்த உடலை இடமாகக் கொண்டு எனது உச்சியில் நிற்பர்.