பக்கம் எண் :

712திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3310. விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
  கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி யாமழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.        2

3311. முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
  குழுவி னான்குல வுங்கையி லேந்திய
மழுவி னானுறை யும்மழ பாடியைத்
தொழுமி னுந்துய ரானவை தீரவே.           3


பொருந்திய பெண்ணை உடையவன். கங்கையைச் சடையில் தாங்கியவன்.
மங்கையை இடம் மேவியவன் என்பவற்றைமுறையே, ‘சடைக் கங்கையான்’
‘இடம் மேவிய மங்கையான்’ என்றது வடமொழி விதி.

     2. பொ-ரை: திருமழபாடியில் வீற்றிருந்தருளும் கங்கையைச் சடையில்
தாங்கிய சிவபெருமானின் திருவடிகளே ஆன்மாக்களுக்கு விதியாவதும்,
அவ்விதியின் விளைவாவதும், ஒளியிற் கலப்பதாகிய முத்தி ஆவதுமாம்.
மனத்தைக் கசியவைத்துத் தன்வயப்படுத்தும் சிவ ஞானத்தை விளைவிக்கும்
அத்தகைய திருவடிகளை வழிபடுவீர்களாக.

     கு-ரை: மழபாடியுள் தலைவராகிய சிவபெருமானது திருவடியே
ஆன்மாக்களுக்கு விதியாவதும். அவ்விதியின் விளைவாவதும், ஒளியிற்
கலப்பதாகிய முத்தியாவதும், மனம் கசிவிப்பதும், அதனால் தன்வயமாகச்
செய்வதும், சிவஞானமாகி விளைவதும், வலிய பற்றுக்கோடாவதும்,
அனைத்தும் ஆம் என்க. மதி - இங்குச் சிவஞானம், வலி - ஆகுபெயர்.
நற்பாதம்:-‘நற்றாள்’ என்ற திருக்குறட் சொற்றொடர்க்குப் பரிமேலழகர்
உரைத்ததுரைக்க.

     3. பொ-ரை: இறைவன் முழவு என்னும் வாத்தியம் உடையவன்.
சுடுகாட்டில் உறையும் பேய்க்கணத்துடன் குலவி நடனம்புரிபவன். அழகிய
கையில் மழுப்படையை உடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருமழபாடியை உங்கள் துன்பம் எல்லாம் நீங்கும்படி தொழுது போற்றுங்கள்.

     கு-ரை: குழு - கூட்டம். குலவும் - விளங்குகின்ற. (நும் துயரானவை
தீரத்) தொழுமின் - வணங்குங்கள். ஆனவை சொல்லுருபு. முழவின் - முழவு
என்னும் வாத்தியத்தால். ஆல் - ஆராவாரிக்கின்ற; பேய்க்கணங்களின் குழு.