பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)56. திருப்பிரமபுரம்769

56. திருப்பிரமபுரம்

பதிக வரலாறு:

     இது பெரியபுராணத்தில் குறிக்கப்பெறாதது.

பண்: பஞ்சமம்

ப.தொ.எண்:314   பதிக எண்: 56

திருச்சிற்றம்பலம்

3394. இறையவ னீசனெந்தை யிமை யோர்தொழு
       தேத்தநின்ற
கறையணி கண்டன்வெண்டோ டணி காதினன்
     காலத்தன்று
மறைமொழி வாய்மையினான் மலையா ளொடு
     மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிர மாபுரம்
     பேணுமினே.                       1


     1. பொ-ரை: இறைவன், ஈசன், எம் தந்தை என்று வானவர்கள்
தொழுது போற்ற நின்று, நஞ்சுண்ட கறுத்த கண்டத்தினன். சங்கினாலாகிய
குழையணிந்த காதினையுடையவன். அக்காலத்தில் வேதத்தின் பொருளை
உபதேசித்தருளியவன். மலைமகளான உமாதேவியோடு தலையில்
பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையுடைய அச்சிவபெருமான்
வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி
வழிபடுவீர்களாக!

     கு-ரை: வெண்தோடு - சங்கக்குழை. காலத்து அன்று மறைமொழி
வாய்மையினான் - அக்காலத்தில் வேதத்தின் பொருளை உபதேசித்
தருளியவன். வாய்மை - உபதேச மொழி, வாய்மை என்க. என்றது
வேதத்துக்குப் பொருளைச் செய்த திருவிளையாடற் புராணசரிதையை.

     சென்னி - சென்னியின்கண், சடையான். பிரமாபுரம், பிரமபுரம்
இரு விதமும் வழக்குண்மை அறிக.