பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)61. திருவெண்டுறை807

61. திருவெண்டுறை

பதிக வரலாறு:

     சண்பைநகர் வேந்தர் திருநாவுக்கரசரொடு, திருவீதிமிழலை,
திருவானைக்கா முதலிய பல தலங்களை வழிபட்டு வருங்கால்,
திருவெண்டுறை சேர்ந்து தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: பஞ்சமம்

ப.தொ.எண்:319   பதிக எண்: 61

திருச்சிற்றம்பலம்

3449. ஆதிய னாதிரையன் னன லாடிய
       வாரழகன்
பாதியொர் மாதினொடும் பயி லும்பர
     மாபரமன்
போதிய லும்முடிமேற் புன லோடர
     வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                 1


     1. பொ-ரை: சிவபெருமான் ஆதிமூர்த்தியானவர். திருவாதிரை
என்னும் நட்சத்திரத்திற்கு உரியவர். நெருப்பைக் கையிலேந்தித் திருநடனம்
புரியும் பேரழகர். தம் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியை ஏற்று
மேலான பொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவர்.
கொன்றை முதலிய மலர்களை அணிந்த முடிமேல், கங்கையையும் பாம்பையும்
அணிந்தவராய், வேதங்களை அருளிச் செய்தவர் சிவபெருமான் ஆவார்.
அப்பெருமானார் மிக்க அன்புடன் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை
என்பதாகும்.

     கு-ரை: ஆதிரையான் - திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரியவன்.
அனல் ஆடிய அரு அழகன் - அனலில் ஆடிய அரிய அழகையுடையவன்,
பரமா பரமன் - மேலானபொருள்கள் எவற்றினும் மிக மேலான
பொருளாயிருப்பவன். பயிலும் - பொருந்திய. போது இயலும் - மலர்களை
யணிந்த.