| "பேயடையா பிரிவெய்தும்"என்னும் மேற்குறித்த திருப்பாடல் தோன்றிற்று. அதிலுள்ள "வெண்காட்டு முக்குளநீர் தோய் வினையார் பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம்பெறுவர். ஒன்றும் ஐயுறவேண்டாம்" என்னும் பொருளை அறிந்து மகிழ்ந்து, திருவெண்காட்டிற்குத் தம் மனைவியாரோடு சென்று, முக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். |
| இங்ஙனம் வழிபட்டுவரும் நாள்களில் ஒரு நாள் இறைவன் அவரது கனவில்தோன்றிச் சைவ சித்தாந்தத்தை நிலைபெறச் செய்யக்கூடிய ஒரு புத்திரனை நீ அடைவாய் என்று சொல்லி மறைந்தருளினார். அவ்வாறே அவர் புத்திரப்பேற்றை அடைந்தார். இக்குழந்தையே சைவசித்தாந்த பரமாசாரியராக விளங்கிய மெய்கண்ட தேவர் ஆவர். |
| தலவிருட்சம் : ஆலமரம்; கொன்றைமரம். |
| உள் பிராகாரத்தில், அகோரமூர்த்தி கையில் சூலத்துடன் எழுந்தருளியிருக்கின்றார். அவர்க்கு எதிரில் காளியின் சந்நிதி உள்ளது. |
| சிதம்பரத்தில் இருப்பதுபோலவே இங்கு நடராஜர் பெருமையுடன் விளங்குகின்றார். |
| இப்பதியில் வெள்ளானை பூசித்துப் பேறு பெற்றது. இதை, |
"வெள்ளானை வேண்டும்வரம் கொடுப்பர் வெண்காடு மேவிய விகிர்தனாரே" | |
| -தி.2ப.35பா.9 |
| என்னும் அப்பர் பெருமானின் இத்தலத் தேவாரப் பகுதியாலும், |
"அயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடு" | |
| -தி.2ப.48பா.7 |
| என்னும், ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியாலும் அறியலாம். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று, அப்பர் பதிகம் இரண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள் இருக்கின்றன. |
| சைவ எல்லப்ப நாவலர் தலபுராணத்தை இயற்றியுள்ளார். அது அச்சில் வெளிவந்துள்ளது. |