பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்241

75. திருவெண்ணியூர்
     தஞ்சாவூர் - திருவாரூர் தொடர்வண்டிப் பாதையில், கோயில் வெண்ணி என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு 2.5.கி.மீ. தூரத்திலிருக்கின்றது. தஞ்சை -நீடாமங்கலம், தஞ்சை - திருவாரூர் பேருந்துகளில் கோயில்வெண்ணி என வழங்கும் இவ்வூரை அடையலாம்.
    இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள நூற்றிரண்டாவது தலம்.
    இறைவர் திருப்பெயர் வெண்ணிக்கரும்பர். இறைவி திருப்பெயர் அழகியநாயகி.
    இறைவர் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து வைத்தாற்போல் இருக்கின்றது.
கல்வெட்டு:
     இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன. இராஜராஜன் கல்வெட்டுக்களை ஆறு. குலோத்துங்கன் ஒன்பது. தேதியில்லா கல்வெட்டு ஒன்றும் உள்ளன. 13-10-1222 தேதியிட்ட இராஜராஜன் கல்வெட்டு நீளமானதாகும். அதன்படி, நாடு சுத்தமலிவளநாடு, உள்நாடு வெண்ணி கூற்றம், ஊர் வெண்ணிநகரம், இறைவன் திருவெண்ணி உடையார் என அறிகிறோம். அந்த இறைவனுக்கு நித்த வினோத வளநாட்டு வீரசோழ வளநாட்டுப் புத்தூரான திரிபுவனச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் திருநாமத்துக் காணியாக விட்ட நிலத்தின் எல்லை கூறப்படுகிறது. அந்நிலத்தில் விளைகிற பொருள்களின் அளக்கும் அளவும் கொடுக்கப்பட்டுள்ளது.
    இனி, குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் "புனல்வாய்த்து" என்ற தொடக்கம் கொண்டவைகள். கோயிலுக்கு நிலங்கொடுக்கப்பட்ட விவரங்கள் அவைகளில் காணப்படுகின்றன. சுற்று வட்டத்து ஊர்களின் பெயர்களும் ஆட்களின் பெயர்களும் அவைகளில் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று 2-7-1196ஆம் தேதியுடையது. ஆகவே கி.பி.12ஆவது நூற்றாண்டின் முற்பகுதியும் இக்கோயில் சிறந்திருந்த காலமாகும்.