பக்கம் எண் :

332
 

கோப்பரகேசரிவர்மன், முதலாம் இராஜராஜ மன்னன், மூன்றாங் குலோத்துங்கசோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன், இவர்களின் காலங்களிலும், விஜயநகர அரசர்களில் வீரப்பிரதாப மகாராயர், தேவராய மகாராயர் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவ்வூர் (மறைக்காடு) உம்பள நாட்டுக் குன்றூர் நாட்டைச் சேர்ந்தது என்று கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. இராஜகேசரி வர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழன் கல்வெட்டு, திருப்பதியம் பாடுவதற்கு நிவந்தம் அளிக்கப்பெற்ற செய்தியைத் தெரிவிக்கின்றது. இராஜேந்திரசோழன் கல்வெட்டு, விக்கிரமன் சந்தியையும் ஏனைய கல்வெட்டுக்கள், விளக்கினுக்கு, ஆடு, ஈழக்காசு இவைகள் கொடுக்கப்பட்டதையும் புலப்படுத்துகின்றன. மராத்திமொழியில் உள்ள கல்வெட்டு பிரதாபசிங் மகாராசர், துளஜாமகாராசர் என்போரைப்பற்றிக் கூறுகின்றன.

56. திருமாற்பேறு

தொண்டை நாட்டுத்தலம். காஞ்சிபுரம் - அரக்கோணம் இருப்புப்பாதையில் தொடர்வண்டி நிலையம். காஞ்சிபுரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. இதுவே எளிதானது.

இத்தலம் ஹரிசக்ரபுரம் எனவும் வழங்கும். திருமால் ததீசி முனிவருடன் போர்செய்ய அவர் சக்கரம் வாய்மடிந்து போயிற்று. சலந்தரனைக் கொன்ற சக்கரம் சங்கரனிடத்திருப்பதையறிந்த திருமால் இத்தலத்திற்குவந்து இறைவனை ஆயிரந்தாமரைகொண்டு அர்ச்சிக்க, இறைவன் ஒரு நாள் ஒரு மலரை மறைத்துவிட்டார். திருமால் அதற்குப்பதிலாகத் தம் கண்ணையிடந்து அர்ச்சிக்க, சுதரிசனம் என்னும் சக்கரத்தை ஈந்தார். கண் இடந்து அர்ச்சித்தமைக்காகப் பதுமாக்ஷன் என்னும் பெயரையும் கொடுத்தார். சோமனும் பூசித்துப் பேறுபெற்ற தலம். இச்செய்தி 'மன்னி மாலொடு சோமன் பணிசெயும் மன்னுமாற் பேற்றடிகளை' என்னும் தேவாரத்தானும், 'பெருமாற்றின் படைவேண்டி நற்பூம்புனல் வருமாற்றின் மலர் கொண்டு வழிபடும் கருமாற்கின்னருள் செய்தவன்' என்னும் திருக்குறுந்தொகை யானும் அறியப்படும். இறைவன்பெயர் மால்வணங்கீசர், மணிகண்டேசர். இறைவி கருணைநாயகி, அஞ்சனாக்ஷியம்மை, தீர்த்தம் பாலாறு.