சக்கிரவர்த்தி கோனேரின்மை கொண்டான் விக்கிரமபாண்டியதேவன், மாறவர்மன் பராக்கிரம பாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், முதலானோர் காலங்களிலும், விஜயநகர அரசர்களில், வீரவிஜய மகாராயர் மகனாகிய பிரதாபதேவ மகாராயர், புக்கண்ண உடையார் மகனார் கம்மப்பண்ண உடையார், வீர விசுவராய மகாராயர் மகனார் காத்தவராய மகாராயர், முதலானோர் காலங்களிலும், பல்லவர்களில், கோப்பெருஞ்சிங்கதேவர் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இதுபொழுதுள்ள கற்றளி, பெரிய சோழராகிய பராந்தக தேவரது மகனாகிய கண்டராதித்த தேவரது மனைவியாரும், மழ பெருமான் அடிகளின் மகளாரும், உத்தமசோழ தேவரது தாயாருமாகிய செம்பியன் மாதேவியாரால் பரகேசரி வர்மனின் பன்னிரண்டாம் ஆண்டில் கட்டப்பெற்றதாகும். இவ்வம்மையார் இக்கோவிலையன்றி, இக்கோவிலில் உள்ள ஸ்நபநமண்டபம், கோபுரம், சுற்றாலை, பரிவார தேவதைகளுக்குக் கோயில்கள் இவைகளையும் கட்டியுள்ளார். இத்திருக்கோயிலில் 1 உள்ள நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியவன் அரசன் நாராயணன் ஆளப் பிறந்தானாகிய வீரசேகர காடவராயனும், திரு மடைப்பள்ளியைக் கட்டியவன் எலிசை மோகனாகிய கச்சிராயனும், உற்சவமூர்த்திக் கோவிலைக் கட்டியவன் வையப்ப கிருஷ்ணம நாயக்கரும், மகாஸ்நப மண்டபத்தைக் கட்டியவன் ஆளப்பிறந்தான் எலிசை மோகனாகிய குலோத்துங்க சோழ காடவராதித்தனும் ஆவர். இந்த மகா ஸ்நபந மண்டபம் கட்டிய செய்தியைப் பற்றி இராஜகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் பதினைந்தாம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது. இக் கோயிலில் உள்ள கோபுரவாசலுக்குக் கண்டராதித்த கோபுரத் திருவாசல் என்று பெயர். சிவபெருமான் திருமுதுகுன்றமுடைய மகாதேவர் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பெற்றுள்ளனர். இத் திருக்கோயிலில் விக்கிரமசோழன் மடம் ஒன்று இருந்தது. இக் கோயிலில் நெய் அளக்கும் உழக்கு தேவாசிரியன் உழக்கு, தேவாசிரியன் கால் என்னும் பெயர்களால் வழங்கப்பெற்றிருந்தது. நந்தவனங்களுக்கு விக்கிரம பாண்டியன் நந்தவனம், இராஜாக்கள் நாயகன் திருநந்தவனம் என்னும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன.
1 See the Annual Reports on South Indian Epigraphy for theyear 1900, 1918, 1935,No.132-140, 39-92, 94-102.
|