இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, சிவபெருமான் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத் தமது உருவமாக்கும் திருப்பதி ஆதலால் இது காசியினும் மேம்பட்டதாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனைப்பாடிப் பன்னீராயிரம் பொன்பெற்று அவைகளை மணிமுத்தாறு நதியில் இட்டுத் திருவாரூர்க் கமலாலயத்தில் பெற்றார். இதற்குத் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் ஏழு, திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் ஒன்று, சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய பதிகங்கள் மூன்று. ஆக பதினொரு பதிகங்கள் இருக்கின்றன. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பழமலை அந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, கொச்சகக்கலிப்பா, பெரியநாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை என்னும் நூல்களை இயற்றியுள்ளனர். அவைகளெல்லாம் அச்சில் வெளிவந்துள்ளன. தலபுராணம் ஞானக்கூத்தச்சிவப் பிரகாசரால் எழுதப்பெற்றது. அச்சில் வெளிவந்துள்ளது. கல்வெட்டு: இக்கோயிலில் எழுபத்துநான்கு கல்வெட்டுக்கள் உள்ளன. அவைகள் சோழர்கள், காடவர், பாண்டியர், விஜய நகரத்தார், குறுநில மன்னர்கள். முதலியோர்களது கல்வெட்டுக்களாகும். அவைகள் பொதுவாக உரைநடையிலும் மெய்க் கீர்த்திகள் அகவலிலும், ஒரு செய்யுளிலுமாக இருக்கின்றன. இவைகளினால் கணக்கற்ற பழைய செய்திகள் கிடைக்கின்றன. திருப்பணிகள், திருவிழாக்கள் மன்னராட்சிகள், வழி பட்டோர் பெயர்கள், அரசர் வெற்றிகள் நில விற்பனை, நிலதானம் ஆகியவற்றைப்பற்றிய செய்திகளையெல்லாம் தெரிவிக்கின்றன. செம்பியன் மாதேவியாரால் இக்கோயிலுக்கு ஒரு திருப்பணி நடந்துள்ளது. வீரசேகர காடவராயன் (1186) அதிகமான் நாட்டையும் கடலையும் அழித்ததாகக் கூறும் கல்வெட்டுச் செய்தியொன்று உள்ளது. இத்திருக்கோயிலில் சோழமன்னர்களுள் பரகேசரிவர்மன், முதலாம் இராசராசன், திரிபுவனச் சக்கிரவர்த்தி இராஜராஜதேவர், திருபுவனச் சக்கிரவர்த்தி குலோத்துங்கசோழதேவர் முதலானோர் காலங்களிலும், பாண்டியர்களில், வீரபாண்டியதேவன், கோனேரின்மை கொண்டான் விக்கிரம பாண்டிய தேவன், திரிபுவனச்
|