பக்கம் எண் :

54
 

தூயவெண் ணீறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும்

நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்துருகிப்

பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச்செஞ்சொல்

மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே

- தி.12 திருநாவு. புரா. 140

இறைவன் 'பொருள்சேர் புகழ்' விரிக்கும் செந்தமிழ் அமுதத் திருப்பாடலை ஓதிக்கொண்டேயிருக்கும் ஒட்பம் தோன்றப் 'பதிகச் செஞ்சொல் மேய செவ்வாய்' என்றருளிய திறம் இனிது உணரத்தக்கது.

தொடையறாச்செவ்வாய்:

சிவஞான சுவாமிகளும் அப்பரடிகள் அழகுருவத்தைத் தமிழாற் சிறப்பித்துள்ளனர். அதனுள் 'ஞானப்பாடல் தொடையறாச் செவ்வாய்' என்று இப்பெருமானாருடைய பாவன்மை தோன்றப் பாடியருளியுள்ளனர்; அவ்வருந் தமிழ்ப்பாடல் பின்வருவதாகும்.

இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும்

உழவா ரத்திண்

படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே

பதித்த நெஞ்சும்

நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன்

ஞானப் பாடல்

தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும்

துதித்து வாழ்வாம்.

(காஞ்சிப்புராணம். பா.13)

திருவாரூர்ப் புராணமுடையார்,

"சாலமிகு பாவமுது வேனில் வெம்மைத் தழலாற

ஆகமநூற் றருமஞ்சான்ற

சீலநிறை சைவநெறி நிழல்பரப்பும் திருநாவுக்கரசு"

என்று புகழ்தல் இங்கு ஒப்பிட்டுணர்தற்குரியது.

"தேவரசு மனமகிழத் திருப்பதிகம் இசைத்தமிழிற்

சிறக்கப்பாடும் நாவரசு"

என்று புகழ்வர் சிவராத்திரிபுராண ஆசிரியர்.