பக்கம் எண் :

639
 

26. திருக்காளத்தி

பதிக வரலாறு:

சுந்தரர், திருமாற்பேறு, திருவல்லம் முதலான பல பதிகளையும் வணங்கித் திருக்காளத்தி யடைந்து கண்ணப்பரை ஆட்கொண்டருளும் இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்காளத்திமலைமேல் மருந்தைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 195-197)

குறிப்பு: இத்திருப்பதிகம், தாம் சிவபெருமானை யன்றிப் பிறிதொரு தெய்வத்தை எண்ணாமையை எடுத்தோதித் தமக்கு அருள் பண்ணுமாறு வேண்டி அருளிச்செய்தது.

பண்: நட்டராகம்

பதிக எண்: 26

திருச்சிற்றம்பலம்

259.செண்டா டும்விடையாய் சிவ

னேயென் செழுஞ்சுடரே

வண்டா ருங்குழலா ளுமை

பாக மகிழ்ந்தவனே

கண்டார் காதலிக்குங் கண

நாதனெங் காளத்தியாய்

அண்டா வுன்னையல்லால் அறிந்

தேத்த மாட்டேனே.

1



1. பொ-ரை: விரைந்து நடக்கும் இடப வாகனத்தை உடையவனே, சிவபெருமானே, செழுமையான ஒளி வடிவினனே, வண்டுகள் நிறையச் சூழும் கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் விரும்பிக் கொண்டவனே, உன்னைக் கண்டவர் பின்பு நீங்காது பேரன்பு செய்யப்படுபவனே, பூதக் கூட்டத்திற்கு அரசனே, திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, பரவெளியில் விளங்குபவனே, அடியேன் உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன்; ஆதலின், அடியேனுக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.

கு-ரை: 'ஆதலால், அடியேனுக்கு அருள்பண்ணுதல்