பதப்பொருள் : அருள் உடைச் சுடரே - அளியையுடைய சுடரே, அளிந்தது ஓர் கனியே - பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே, பெருந்திறல் - பேராற்றலையுடைய, அருந்தவர்க்கு - அருமையான தவத்தினையுடையோர்க்கு, அரசே - அரசனே, பொருள் உடைக் கலையே - மெய்ப்பொருளை விளக்கும் நூலானவனே, புகழ்ச்சியைக் கடந்த போகமே - நூல்கள் புகழும் புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே, யோகத்தின் பொலிவே - யோகக் காட்சியில் விளங்குகின்றவனே, தெருள் இடத்து - தெளிவாகிய இடத்தையுடைய, அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே - அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இருள் இடத்து - இருள் நிறைந்த இவ்வுலகில், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது? விளக்கம் : செங்காய் முழுச்சுவை தாராது ஆதலின், இறைவனை 'அளிந்ததோர் கனியே' என்றார். அவனது புகழைச் சொற்களால் அளவிட்டுச் சொல்ல முடியாதாதலின், 'புகழ்ச்சியைக் கடந்த போகமே' என்றும், ஆனால் அனுபவத்தில் விளங்குபவன் ஆதலின், 'யோகத்தின் பொலிவே' என்றும் கூறினார். அக்காட்சி சித்தம் தெளிந்த போது இவ்வுலகிலேயே உண்டாமாதலின், 'இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்றார். இதனால், இறைவன் அடியார் மனம் கோயிலாகக் கொண்டு அருளுவான் என்பது கூறப்பட்டது. 4 ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே மெய்ப்பதம் அளியா வீறிலி யேற்கு விழுமிய தளித்ததோ ரன்பே செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெரு மானே எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. பதப்பொருள் : உனக்கு ஒப்பு இல்லா - உனக்கு ஒருவரும் நிகரில்லாத, ஒருவனே - ஒருத்தனே, அடியேன் உள்ளத்துள் - அடியேனது மனத்தில், ஒளிர்கின்ற ஒளியே - விளங்குகின்ற ஒளியே, மெய்ப்பதம் அறியா - உண்மையான நிலையை அறியாத, வீறு இலியேற்கு - பெருமையில்லாத எனக்கு, விழுமியது - மேன்மையாகிய பதத்தை, அளித்தது - கொடுத்ததாகிய, ஓர் அன்பே - ஒப்பற்ற அன்பானவனே, செப்புதற்கு அரிய - சொல்வதற்கு அருமையான, செழுஞ்சுடர் மூர்த்தி - வளமையான சுடர் வடிவினனே, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே -
|