பதப்பொருள் : அத்தனே - தந்தையே, அண்டர் அண்டமாய் நின்ற - தேவராயும் தேவர் உலகமாயும் நின்ற, ஆதியே - முதல்வனே, யாதும் ஈறு இல்லா - சிறிதும் முடிவு இல்லாத, சித்தனே - ஞான வடிவினனே, பத்தர் சிக்கெனப் பிடித்த - அடியார்கள் உறுதியாகப் பற்றின, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, பித்தனே - அன்பர்பால் பேரன்பு கொண்டவனே, எல்லா உயிருமாய்த் தழைத்து - எல்லா உயிர்களுமாய்க் கலந்து விளங்கியும், பிழைத்து - நீங்கி, அவை அல்லையாய் நிற்கும் - அவை அல்லாமல் தன்மையால் வேறாய் இருக்கின்ற, எத்தனே - மாயம் உடையவனே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கெழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது? விளக்கம் : அறிவே வடிவமாய் உள்ளவனாதலின், முதலும் முடிவும் இன்றி விளங்குகின்றான் என்பார், 'யாதும் ஈறில்லாச் சித்தனே' என்றும், உயிர்களிடத்து விருப்பமுடையவனாதலின், 'பித்தனே' என்றும், உயிரோடு கலந்திருந்தும் அவற்றில் தொடக்குறாது நிற்றலின், 'எத்தனே' என்றும் விளித்தார். இதனால், இறைவனது இயல்பு கூறப்பட்டது. 8 பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. பதப்பொருள் : பால் - பாலை, நினைந்து ஊட்டும் - காலமறிந்து கொடுக்கின்ற, தாயினும் - தாயைக்காட்டிலும், சாலப்பரிந்து - மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய, ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி, உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் ஞானத்தைப் பெருக்கி, உலப்பிலா - அழியாத, ஆனந்தம் ஆய - இன்பமாகிய, தேனினைச் சொரிந்து - தேனைப் பொழிந்து, புறப் புறம் திரிந்த - நான்கு புறங்களிலும் உடன் திரிந்த, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, யான் உனைத் தொடர்ந்து - நான்
|