பக்கம் எண் :

திருவாசகம்
605


45. யாத்திரைப்பத்து
(தில்லையில் அருளியது)

சிவலோகத்துக்குச் செல்ல அனைவரையும் அழைத்துக் கூறிய பகுதியாதலின், இது, 'யாத்திரைப்பத்து' எனப்பட்டது.

அனுபவ அதீதம் உரைத்தல்

துரியாதீத நிலையாகிய பேரின்ப அனுபவத்தைக் கூறுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

பூவார் சென்னி மன்னன்எம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளங் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய்
ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.

பதப்பொருள் : பூ ஆர் - மலர் நிறைந்த, சென்னி - முடியையுடைய, மன்னன் - அரசனாகிய, எம் புயங்கப் பெருமான் - பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியோமை - சிறியவர்களாகிய நம்மை, ஓவாது - இடையறாமல், உள்ளம் கலந்து - உள்ளத்தில் கலந்து, உணர்வு ஆய் - உணர்வுருவாய், உருக்கும் - உருக்குகின்ற, வெள்ளக்கருணையினால் - பெருகிய கருணையால், ஆவா என்னப்பட்டு - ஐயோ என்று இரங்கியருளப்பட்டு, அன்பு ஆய் - அன்பு உருவாய், ஆட்பட்டீர் - ஆட்பட்டவர்களே, பொய் விட்டு - நிலையில்லாத வாழ்க்கையை விட்டு, உடையான் கழல் புக - நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடைய, காலம் வந்தது - காலம் வந்துவிட்டது, போவோம் - வந்து ஒருப்படுமின் - வந்து முற்படுங்கள்.

விளக்கம் : 'இறைவன் உள்ளத்திலே கலந்து உணர்வு மயமாகி உருக்குகின்றான்' என்பார், 'ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும்' என்றார். இறைவன் திருவுளம் இரங்கி அருள் செய்தமையால் ஆட்பட்டார்கள் என்பார், 'ஆவா என்னப்பட்டு ஆட்பட்டீர்' என்று விளித்தார். ஆட்பட்ட பின் அன்பு மிகும் என்பதற்கு 'அன்பாய்' என்றும் கூறினார்.

இனி, இறைவனுக்கு ஆட்பட்டவர், அவனை அடைய வேண்டுமாதலின், அதற்குக் காலம் இது என்று, 'ஆட்பட்டீர்