பக்கம் எண் :

திருவாசகம்
95


அத்தா போற்றி யரனே போற்றி
உரையுணர் விறந்த வொருவ போற்றி

125. விரிகட லுலகின் விளைவே போற்றி
அருமையி லெளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையு மொருவ னாக்கி இருங்கழல்

130. சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவது மாவதுங் கடந்தாய் போற்றி
முழுவது மிறந்த முதல்வா போற்றி

135. மானேர் நோக்கி மணாளா போற்றி
வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

140. வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவ ருள்ளத் தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி

145. இடைமரு துறையும் எந்தாய் போற்றி
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி

150. கண்ணா ரமுதக் கடலே போற்றி
ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பாராயத்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி