வாயில்கள்: இராசராசேச்சரத்தின் முதற்கோபுரவாயிலுக்குக் கேரளாந்தகன் திருவாசல் என்றும், இரண்டாம் கோபுரவாயிலுக்கு இராசராசன் திருவாசல் என்றும், தெற்குத்திருவாசலுக்கு விக்கிரம சோழன் திருவாசல் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. தீர்த்தம்:இக்கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் திருக்குளம் ஒன்று இருந்தது. அதற்கு மண்டூக தீர்த்தம் என்று பெயர். அது சகம் 1724இல் அதாவது கி.பி. 1802இல் சரபோஜி மன்னரால் ஒரு கிணறு வடிவமாகக் கட்டப்பட்டுள்ளது. திருச்சுற்றுமாளிகை: இக்கோயிலின் திருச்சுற்றுமாளிகையைக் கட்டியவர் சோழமண்டலத்து உய்யக்கொண்டான் வளநாட்டு அமண்குடியான கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீகிருஷ்ணன் இராமனான மும்முடிச்சோழ பிரமராயர் ஆவர். திருவிழாக்கள்:இத்திருக்கோயிலில் மாதந்தோறும் சதயத் திருவிழா, கார்த்திகை மாதத்தில் கார்த்திகைநாள் திருவிழா, மாதந்தோறும் சங்கிராந்திவிழா, ஆட்டைத்திருவிழா அல்லது பெரிய திருஉற்ஸவம் இவைகள் நடைபெற்றுவந்தன. இவைகளுள் சதயத் திருவிழா என்பது முதலாம் இராசராசசோழன் பிறந்த சதய நட்சத்திரத்தில் மாதந்தோறும் நடத்தப்பெற்று வந்ததாகும். ஆட்டைத் திருவிழா என்பது ஆண்டுதோறும் நடத்தப்பெறும் பெரிய விழாவாகும். இது வைகாசி மாதத்தில் நடை பெற்று வந்தது. இவ்விழாக் காலங்களில் இராச ராச நாடகம் நடத்தப் பெறுவதுண்டு. “உடையார் வைகாசிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேஸ்வர நாடகமாட நித்தம் நெல்லுத் தூணியாக நூற்றிருபது கலம்’’ என்னும் “திருமருவிய செங்கோல் வேந்தன்’’ எனத் தொடங்கும் கோப்பரகேஸரி பன்மரான உடையார் ராஜேந்திர தேவரின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. அம் மன்னன் காலத்தில் நாடகம் நடித்துவந்தவன் சாந்திக் கூத்தன் திருமுதுகுன்றனான விஜய ராஜேந்திர ஆசாரியன் ஆவன். இந்த வைகாசிப் பெருந்திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெற்று வந்தது. “பெரிய திரு உத்ஸவம் நாள் ஒன்பதுக்கும்’’, “ஆட்டைத் திருவிழா எழுந்தருளும் நாள் ஒன்பதும்’’ என்னும் கல்வெட்டுப் பகுதிகளே சான்றாகும் [மிகப் பழங்காலத்தே விழாக்கள் ஏழுநாட்கள் நடைபெற்றுவந்தன. “ஏழு நாளும் கூத்தராய் வீதிபோந்தார் குறுக்கை வீரட்டனாரே’’ என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள் |