பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
173

2

பாங்கற் கூட்டம்

2.22 தளர்வகன்றுரைத்தல்

   
தளர்வகன்றுரைத்தல் என்பது உயிரென வியந்துசென்று, பூக்கொய்தன் முதலிய விளையாட்டையொழிந்து யாருமில்லொரு சிறைத் தனியேநின்று இவர்செய்யாநின்றபெரிய தவம் யாதோவென அவளைப் பெரும்பான்மை- கூறித் தளர்வு நீங்கா நிற்றல். அதற்குச் செய்யுள்-

40. தாதிவர் போதுகொய் யார்தைய
      லாரங்கை கூப்பநின்று
   சோதி வரிப்பந் தடியார்
      சுனைப்புன லாடல்செய்யார்
   போதிவர் கற்பக நாடுபுல்
      லென்னத்தம் பொன்னடிப்பாய்
   யாதிவர் மாதவம் அம்பலத்
      தான்மலை யெய்துதற்கே.

40

_____________________________________________________________

2.22.  பனிமதி நுதலியைப் பைம்பொ ழிலிடைத்
      தனிநிலை கண்டு தளர்வகன் றுரைத்தது.


   
இதன் பொருள் : தாது இவர் போது கொய்யார்-தாதுபரந்த பூக்களைக் கொய்கின்றிலர்; தையலார் அங்கை கூப்ப நின்று சோதி வரிப்பந்து அடியார்-ஆயத்தாராகிய தையலார் அங்கைகளைக் கூப்பநின்று ஒளியையும் வரியைமுடைய பந்தை அடிக்கின்றிலர்; சுனைப் புனல் ஆடல் செய்யார் - சுனைப்புனலாடுதலைச் செய்கின்றிலர்; போது இவர் கற்பக நாடு புல்லென்னத்தம் பொன் அடிப்பாய் அம்பலத்தான்மலை எய்துதற்கு இவர் மாதவம் யாது-அதனாற் போதுபரந்த கற்பகங்களையுடைய தேவருலகம் பொலி வழிய நிலந்தோயாத தமது பொன்போலுமடியை நிலத்தின்கட்பாவி அம்பலத்தானது கயிலையை யெய்துதற்கு இவர் செய்யக் கருதுகின்ற பெரிய தவம் யாது! எ-று.

   
தவஞ்செய்வார் புறத்தொழில்களை விட்டு அகத்தானென்றையுன்னி மலைக்கட்டங்குவரன்றே. இவளும் பூக்கொய்தல் முதலாகிய தொழில்களைவிட்டு மனத்தாற்றன்னை நினைந்து வரையிடத்து நிற்றலான் யாதிவர் மாதவமென்றான். மெய்ப்பாடும் பயனும்: அவை.

40