பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
25

என

 ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

என்று தாம் அருளிய திருஉந்தியார் என்னும் நூலில் தெரிவித்துள்ளார். திருமூலரோ,

    முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
    அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
    மகட்குத் தாய் தன் மணாளனோடாடிய
    சுகத்தைச்சொல் என்றால் சொல்லுமாறு எங்ஙனே?

(தி.10 பா. 2944)


என்று தெரிவிக்கிறார்.

வழக்க, பழக்க, ஒழுக்கம்: 

   
“வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
     நிகழ்ச்சி அவர் கட்டாகலான”

- தொல். மரபியல் 93

என்பது தொல்காப்பியம். உலகியல் நடைமுறையை வழக்கு என்கிறோம். பண்பாடு இல்லதாருடைய நடைமுறையை வழக்கென்றல் கூடாது. பண்பால் உயர்ந்தோருடைய நெறிமுறைகளே வழக்கெனக் கொள்ளப்படும். அவ்வழக்கத்தையே ஒழுக்கம் எனப்போற்றி மேற்கொள்கிறோம். பெரியோர் வழக்கமே மக்களிடையே பழக்கமாகிப் பின்னர் அதுவே ஒழுக்கம் என மக்களால் போற்றப்படுகிறது. எனவே அகம், புறம் என்னும் இருவகை ஒழுக்கமும் உயிரினும் மேலாக ஓம்பப்படும் என்பதைத் திருவள்ளுவர்,

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.

- குறள் 131

என அறிவிக்கிறார். ஒழுக்கம் என்று வாழ்வில் எல்லாத் துறைகளிலும் இருந்தபோதிலும் சிறப்பாக அகத்துறையில் குடும்ப வாழ்க்கையில் நெறியோடு வாழ்வதையே ஒழுக்கம் எனக் கொள்ளப்படுகிறது. ஒருவனை ஒழுக்கம் கெட்டவன் என்றால் அது புறத்துறை ஒழுக்கத்தைக் குறியாது அகத்துறை வாழ்வில் கெட்டவன் என்ற பொருளையே உலகியலில் குறிப்பதைக் காணலாம்.

ஒழுக்கமும் அன்பும்:

   
மேலும் ஆண்களின் அகவாழ்வு நெறிமுறையை ஒழுக்கம் என்றும் பெண்களின் அகவாழ்வு நெறிமுறையைக் கற்பு என்றும் தமிழ்ப் பண்பாடு நமக்கு அறிவிக்கிறது. கற்பு என்பது கற்றலையும்