(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று
துறை: அணைந்தவழியூடல்.
(இ-ம்)
இதற்கு அவனறிவு ஆற்ற அறியு மாகலின் (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண்
புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நானிகட்டி இயன்ற நெஞ்சம் தலைப்பெயத்
தருக்கி எதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும் எனவரும் விதிகொள்க.
1-5:
மதியம்.....................ஊர
(இ-ள்)
மதியம் உடல் குறைந்த வெள்ளாங் குருகு இனம்-திங்களினது உடலின் நிறத்தைக் குறைபடுத்திய
நிறத்தையுடைய வெள்ளைக் கொக்கினங்கள்; பைங்காழ் தடவி செங்கயல் துரந்து உண்டு-தமது
பசிய காலால் தடவிச்சிவந்த கயல்மீன்களைத் துரத்தியுண்டு; கழுக்கடை அன்ன தம் கூர்வாய்
வழிப்புலவு-ஈட்டி நுனியையொத்த தமது கூரிய அலகிலுள்ள பழிக்கத்தகுந்த புலாலை; மதி எழில்
விரித்த வெண்தளை இதழ் தாமரை மலர்மலர்-திங்களினது அழகைத் தன்னிடத்தே காட்டிய
வெள்ளிய கட்டமைந்த இதழையுடைய தாமரையின் மலர்ந்த மலரிலே; துவட்டும் வயல்அணிஊர
- துடைத்துக்கொள்வதற்கிடமான வயல்கள் அழகு செய்கின்ற ஊரையுடையோய் என்க.
(வி-ம்.)
வெள்ளாங் குருகின் நிறத்தை நோக்குழித் திங்களின் நிறம் குறைந்தவெண்மையாகத் தோன்றுதலின்
மதியம் உடல் குறைந்த வெள்ளாங் குருகு என்றாள். மதியம்-திங்கள். வெள்ளாங் குருகு-வெள்ளைக்கொக்கு.
பைங்கால் தடவி செங்கயல் துரந்துண்டு என்புழிச் செய்யுளின்பம் உணர்க. கழுக்கடை-ஈட்டியின்
நுனி. புலவு-புலனாற்றம். மதிபோல ஒளிவிரித்த வெண்டாமரை என்க. மலர்மலர்: வினைத்தொகை.
துவட்டல்-துடைத்தல்.
6-9:
கோளகை....................அரக்கன்
(இ-ள்)
கோளகைக் குடிலில் குனிந்து இடைந்து-அண்டகோளகையாகிய குடிலின்கண் செல்லும்போது தலை
குனிந்து சென்று விலகி; அப்புறத்து இடைநிலை அற்ற பெருவெளி அகத்து-அவ்வண்டகோளகைக்குப்
புறத்தின்கன் அமைந்த தடையற்ற பெரிய பரந்த வெளியிடத்து; முடக்கு உடல் எடுத்த தொழில்
பெறுவாழ்க்கை-முடங்கிய உடம்பொடு தோன்றிய இடையறாத தொழிலைப்பெற்ற வாழ்க்கையினையுடைய;
கவைத்தலைப் பிறை எயிறு-பிளவான நுனியினையுடைய பிறைபோன்ற பற்களையும்; இருள் எழில்
அரக்கன்-இருண்ட நிறத்தையுங் கொண்ட இராவணன் என்க.
|