பக்கம் எண் :

மூலமும் உரையும்565



திருக்கோவையார் செய்யுள்: 368
வாயிலவர் வாழ்த்தல்

     அஃதாவது: இல்லத்தார் செவ்வணி விடுக்க அதுகண்ட தலைவன் தலைவியின் பூப்பியல் செவ்வி கெடாமல் அவள் மெலிவறிந்து வந்துற்றமை கண்ட வாயிலவர் அவன் பெருந்தன்மையைப் பாராட்டி வாழ்த்தியது என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
     கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை
     யானின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
     பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
     யேதக்க வாய்மையனே. .

தலைமகனது தகவுடைமை நிலைதகுவாயில் நின்றோருரைத்தது

     (இ-ள்) வில்லைப் பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து-வில்லை ஒத்த புருவத்தையும் வேல் போன்ற கண்களையுமுடைய நம் பெருமாட்டியின் வாட்டமறிந்து; வல்லைப் பொலிவொடு வந்தமையான்-விரைந்து இவளது பொலிவு கெடுமுன்னரே வந்தமையால்; வான் நின்று வழுத்தும்- வானவர் நின்று தொழாநின்ற; தில்லைப் பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின் - தில்லையின்கண் பொலிவுற்றுத் திகழும் சிவபெருமானுடைய திருச்சிற்றம்பலத்தைப் இடையறாது நினைகின்ற மெய்யடியார் போல; மல்லைப்பொலி வயல் ஊரன்-வளத்தாற் பொலியும் வயலையுடைய ஊரையுடைய நம்பெருமான்; மெய்யே தக்க வாய்மையான்-மெய்யாகவே நல்ல வாய்மையுடையனே; அவன் நீடு வாழ்க; என்க.

     (வி-ம்.) வில்லை என்புழி ஐகாரம் இசை நிறை. நுதல்; ஆகுபெயர். கண்ணி-கண்ணையுடையாள். வல்லை-விரைந்து. பொலிவொடென்றது அவள் பொலிவு கெடுமுன்னரே என்றவாறு. வான்: ஆகுபெயர். மல்லல் என்பது கடைகுறைந்து ஐகாரச் சாரியை பெற்று நின்றது. ‘மல்லற் பொலி’ என்பதும் பாடம். மெய்ப்பாடு-உவகை; பயன்-மகிழ்தல்.