பக்கம் எண் :

265

  ஒருநான் வழியே பாவ முலகத்தை யுடற்றா நிற்ப
ஒருநர தேவ னீட்டும் புண்ணிய முலகுக் கந்தப்
பருவரல் துடைத்து நித்ய பரகதிப் பயனை நல்கல்
திருவருண் மாட்சிக் கேற்ற திவ்விய முறையென் றோர்தி.

446
   
  நம்பிரா னுயிர்த்தெ ழுந்த நலம்பெறு முகூர்த்தந் தன்னில்
அம்புவி யதிர வஞ்சிக் காவல ரயர்ந்து வீழ
உம்பர்நின் றிழிந்த தேவ தூதரோ ரிருவ ரொல்லை
இம்பரிற் சேம வைப்பை யெதிர்ந்தனர் பகைவ ரெஞ்ச.
447
   
  இருள்புலர் காலை கண்ட வேந்திழை மாரோர் மூவர்
தெருளுறீஇ யெழுந்தெம் மையன் சேமவைப் பதனை யண்மி
மருளறச் சமாதி வாயில் திறவுண்ட மரபை நோக்கி
வெருளுறீஇக் கலங்கி நின்றார் வெய்துளந் திகைத்து மாதோ.
448
   
  ஆயிடை யருகர் நின்று மவிரொளி மின்னி னார்ந்த
தூயுடை பரித்த தேவ தூதரோ ரிருவர் தோன்றி
நீயிரிச் சேம வைப்பி னேடுவ தெவன்கொல் ஜீவ
நாயகன் றன்னை முன்ன நவின்றவா சகத்தை யோர்மின்.
449
   
  ஈண்டுளா ரல்லர் ஜீவ னியைந்தெழுந் தருளி னாரக்
காண்டகு நம்பி நும்முன் கலிலெய நாடு சேர்வர்
பூண்டமெய் யன்ப ருக்குட் புகலுமிப் புதுமை யென்னாச்
சேண்டலத் தெழுந்து போனார் நிகழ்ந்தவை தெரியச் செப்பி.
450
   
                  வேறு
   
  உன்ன தேசனு யிர்த்தெழுந் தாரெனச்
சொன்ன சொல்லமு தஞ்செவி தோய்தலும்
மன்னு நித்திய வாழ்வுகை வந்தெனப்
பொன்ன னார்க்குட்சி றந்தது புத்துயிர்.
451
   
  வள்ளல் சொற்றவ சனமும் வைகறைப்
பள்ளி நின்றெழு பான்மையுந் தம்முளே
உள்ளி யுள்ளத்து வட்டெழு மோகையுந்
தெள்ளி தச்சமுங் கொண்டுதி யங்கினார்.
452
   
  உரையி றந்தவு வகைப்பெ ருங்கடல்
கரைபு ரண்டுக தித்ததுக் காக்கினி
விரைவின் மாய்ந்திட மெல்லிய லாரெழுந்
துரைசெய் வாந்திருத் தொண்டர்க்கென் றோடினார்.
453