பக்கம் எண் :

சீறாப்புராணம்

1075


இரண்டாம் பாகம்
 

மரியாதையினது செய்கையையும், பொறுமையையும் பூண்டவனான இந்த நல்ல குணத்தையுடைய கிழவன் யாவன்? என்று தெரிய வேண்டு மென்று சிந்தையினிடத்து அமையச் செய்து அழகிய தோள்களை யுடைய விருத்தாப்பியனே! உனது வருகையை எனக்குச் சொல்லுவாயாக வென்று கேட்டார்கள்.

 

2894. உரையெனு மொழிகேட் டும்பரின் முதியோ

          யுலகினுக் கொருதனி யரசே

     சரநெறி நடத்து மறைமதக் களிறே

          தரியலர்க் கடலரி யேறே

     பெருகிய குலமும் பெயருமென் பதியும்

          பேரறி வாளரிற் பழகி

     வருமுளக் கருத்துங் கேண்மினென் றொதுங்கி

          வாய்புதைத் துரைக்கலுற் றனனால்.

3

      (இ-ள்) அவ்வாறு சொல்லுவாயாக வென்று கேட்ட வார்த்தைகளை அவ் விருத்தாப்பியன் கேள்வியுற்றுத் தேவர்களாகிய மலாயிக்கத்து மார்களிலும் முதுமையை யுடைய நபிகட் பெருமானே! எல்லா வுலகங்களுக்கும் ஒப்பற்ற ஏகச் சக்கரவர்த்தியே! சன்மார்க்க நடையில் நடத்தா நிற்கும் வேதமாகிய மதத்தைப் பொருந்திய யானையானவரே! சத்துராதியாகிய யானைகளுக்கு வலிமையைக் கொண்ட ஆண் சிங்க மானவரே! ஓங்கிய எனது கோத்திரத்தையும்  நாமத்தையும் நகரத்தையும் யான் பெரிய ஞானத்தையுடையோர்களின் பால் பழக்க முற்று அதனால் வந்த எனது சிந்தையினது எண்ணத்தையுங் கேட்பீர்களாக வென்று ஒதுங்கி வாய் பொத்திச் சொல்ல ஆரம்பித்தான்.

 

2895. வேரியங் கனித்தேன் பொழிதர வோடி

          விடுநெடு மதகினில் வழிய

     வாரிசக் கழனி வரிவரா லருந்தி

          மேதியின் மடுநடுக் குடையும்

     பாரிசென் றுரைக்கும் வளமைநா டுடுத்த

          புரிசைசூழ் பதியினிற் பிறந்தோ

     னேரிசைந் தீன்றா ரிருவருஞ் சல்மா

          னெனவிடும் பெயரினன் சிறியேன்.

4

      (இ-ள்) சிறியே னாகிய யான் வாசனையின் அழகிய பழங்களினது மது வானது சிந்த ஓடி விட்ட நெடிய மதகிற் பாய, அதைத் தாமரை மலர்களையுடைய வயல்களிலுள்ள நீட்சியுற்றவரால் மீன்களுண்டு எருமையினது மடுவின் மத்தியைக் குடைகின்ற பாரி சென்று கூறும் செல்வத்தை யுடைய நாட்டைத் தனக்கு ஆடையாக வுடுத்த கோட்டை மதில்கள் சூழ்ந்த நகரத்தின்