பக்கம் எண் :

சீறாப்புராணம்

1107


இரண்டாம் பாகம்
 

2991. பவ்வமுற் றிடுநெடும் பாரி னீங்கலா

     தெவ்வுழை யிருக்கினு முகம்ம தென்பவன்

     செவ்விய னலனவ னூக்கஞ் சீர்கெட

     வெவ்வினை விளைத்திசை நிறுத்த வேண்டுமால்.

27

      (இ-ள்) அன்றியும், அந்த முகம்மதென்பவன் சமுத்திரமானது பொருந்திய நீண்ட இப் பூமியின் கண் நீங்காது எந்தத் தானத்திலுறைந் தாலும் செவ்வை யாகிய மனத்தை யுடையவனல்லன். அவன் வலிமையானது சீர்கெடும் வண்ணம் நாம் கொடிய யுத்தங்களைச் செய்து கீர்த்தியை நிலையாக நாட்டுதல் வேண்டும்.

 

2992. என்றவ னினையன வியம்பச் சூழ்தர

     நின்றவர் கேட்டிவை நினைவி தாமெனக்

     குன்றென விரும்புயம் வளர்ந்து கொண்டெழ

     வன்றிறற் பெரும்பகை மனத்த ராயினார்.

28

      (இ-ள்) என்று இப்படிப்பட்ட சமாச்சாரங்களை அந்த அபூஜகிலென்பவன் சொல்ல, சூழ நின்ற காபிர்கள் அதைக் கேள்வியுற்று இச்சமாச்சாரங்களே கருத்தென்று சொல்லி மலையைப் போலும் பெருமை பொருந்திய தங்களின் இரு தோள்களும் பூரித்துக் கொண்டெழும்ப, கொடிய வலிமையைப் பொருந்திய பெரிய விரோதத்தைக் கொண்ட இதயத்தை யுடைவர்களானார்கள்.

 

2993. ஈரமில் லபூசகு லென்னு மன்னவன்

     சார்பினி லுறவினிற் றக்க வேந்தரும்

     பாரிடைச் சிறுகுடிப் படையின் மாந்தரு

     மூரிடைப் படையொடு மொருங்கு கூடினார்.

29

      (இ-ள்) அவ்விதமாகி அன்பில்லாத அபூஜகிலென்று சொல்லும் அரசனின் பக்கத்திலும் உறவிலுமுள்ள தகுதியையுடைய மன்னர்களும் இவ்வுலகத்தின் கண் சிறிய குடிப்படையையுடைய ஜனங்களும் அந்த திரு மக்கமா நகரத்தின் கண் தங்கள் தங்களாயு தங்களோடும் ஒன்றாய் வந்து சேர்ந்தார்கள்.