பக்கம் எண் :

சீறாப்புராணம்

1166


இரண்டாம் பாகம்
 

கைத்தாளங்களும், சமுத்திரமு மலைக்கவும், பெரிய இடியானது மயங்கவும், இப் பூமியானது அதிரவும் ஒலித்தன. 

 

3163. பருதியின் கதிரான் மதியையேந் தினபோற்

          பவளக்கால் வெண்குடை நிழற்றத்

     திரடருந் துவசம் வெளியறச் செருகச்

          செம்மணித் துகில்செயா லவட்ட

     மிருபுற நெருங்க விசிறிசாந்த தாற்றி

          யிரைகடற் றிரையென மலிய

     வருபடை நாப்ப ணெறிந்தபா வாடை

          வானமின் னெனத்திசை மலிய.

123

      (இ-ள்) அன்றியும், சூரிய கிரணத்தினால் சந்திரனைத் தாங்கினதைப் போலும் பவளத்தினாற் செய்யப்பட்ட காலையுடைய வெள்ளிய சந்திர வட்டக் குடையானது நிழலைச் செய்யவும், திரட்சியைக் கொண்ட கொடிகளானவை வெளியில்லாமற் செருகவும், இரு பக்கங்களிலும் செந் நிறத்தைப் பொருந்திய இரத்தினங்களை யுடைய வத்திரத்தினால் இயற்றப் பட்ட ஆல வட்டங்கள் செறியவும், சத்திக்கா நிற்கும் சமுத்திரத்தினது அலைகளைப் போலும் விசிறிகளும் சிற்றால வட்டங்களும் மலியவும், வருகின்ற படையினது மத்தியில் வீசிய பாவாடை யானது திசைகளி லெல்லாவற்றிலும் வானத்தினது மின்னலைப் போல் அதிகரிக்கவும்.

 

3164. வரையிழி யருவி யெனக்கவுட் கரட

          மதங்கரைத் திருபுறம் வழிய

     வெரிமணி வயிரக் கிம்புரிப் பெருங்கோ

          டிணைவளைப் பிறையினு மிலங்கத்

     திரள்பனை நெடுங்கைத் துளைவழித் திவலை

          தெருத்திசை மழையெனச் சிதறக்

     கருவுடை மயிர்வாய்ப் பிடிக்கணந் தழுவிக்

          கடகரிக் குலநெருங் கினவால்.

124

      (இ-ள்) மதத்தைக் கொண்ட ஆண் யானைக் கூட்டங்கள் மலையின் கண்ணிருந்து இறங்குகின்ற அருவியைப் போலும் கதுப்பாகிய மதம் பாய்ச் சுவட்டினால் மத நீரைக் கரைத்து இரண்டு பக்கங்களிலுஞ் சிந்தவும், பிரகாசியா நிற்கும் வயிர மணிகளைப் பதித்த பூணையுடைய பெரிய இரு கொம்புகளும் வளைவைக் கொண்ட சந்திரனைப் பார்க்கிலும் ஒளிரவும், திரண்ட பனை மரத்தை யொத்த நெடிய துதிக்கையினது துவாரத்தின் வழியாக வருகின்ற மத நீரினது துளிகள் வீதிகளினிடத்து மழையைப் போலுஞ் சிதறவும், கருப்பத்தை யுடைய மயிரினது வாயைப் பெற்ற பெட்டை யானைகளினது கூட்டத்தைக் கலந்து நெருங்கின.