பக்கம் எண் :

சீறாப்புராணம்

1165


இரண்டாம் பாகம்
 

மானுடர்களிற் புலியாகிய அலி யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்கள் எழும்பினார்கள்.

 

3161. மலரணைப் படுத்த துகிலின்மே னடந்து

          வானவர் மகளிரேத் தெடுப்பச்

     சிலைவல ரபித்தா லிபுமனைக் குரிய

          திருநபி தமைவளர்த் துவந்து

     பலனுறும் பாத்தி மாவெனு மடமா

          னிருவழிப் பாவைகண் களிப்ப

     விலகிய மடவார் குரவைக ளியம்ப

          வெழிலலி வாசிமேற் கொண்டார்.

121

      (இ-ள்) அழகினை யுடைய அலி யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு எழும்பிப் புஷ்பத்தினாற் செய்யப்பட்ட பாயலில் விரித்த வத்திரத்தின் மீது நடந்து தேவ மகளிராகிய கூறுலீன்கள் துதிக்கவும், கோதண்டத் தொழிலில் வல்லமை பெற்றவரான அபீத்தாலி பவர்களின் வீட்டிற்குச் சொந்தமாகிய தெய்வீகந் தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களை விரும்பி வளர்த்துப் பலனைப் பெற்ற பாத்திமா வென்று கூறும் இளம் பிராயத்தைக் கொண்ட மானினது பார்வையை யொத்த இரு கண்களையுடைய பெண்ணானவர்கள் தங்களின் நேத்திரங்கள் மகிழ்ச்சி யடையவும் பிரகாசியா நிற்கும் இளம் பிராயத்தினது பெண்கள் குரவைக ளியம்பவும், குதிரையின் மீதேறினார்கள்.

 

3162. பேரிகை திமிலைக் குடப்பறை தடாரிப்

          பீலியார் திண்டிம முரசோர்

     பாரிசப் பதலை யிடக்கைதட் டியநீள்

          பணவம்வா ரணிதட மொந்தை

     பூரிகை நவுரி காகளஞ் சின்னம்

          போர்வயிர் கொம்புகைத் தாளம்

     வாரியு மலைப்பப் பேரிடி மயங்க

          மண்ணதிர் தரமுழங் கினவால்.

122

      (இ-ள்) அவ்வாறு ஏற, பேரிகைகளும், திமிலைகளும், குடத்தை நிகர்த்த பறைகளும், தடாரிகளும், சிறு சின்னங்களைப் பொருந்திய திண்டிமங்களும், முரசங்களும், ஒற்றைப் பக்கத்தைக் கொண்ட பதலைகளும், இடக் கைகளும், கட்டியஞ் சொல்லுகின்ற நீண்ட தம்பட்டங்களும், வாரை யணியப் பெற்ற பெரிய மொந்தைகளும், பூரிகைகளும், நவுரிகளும், காகளங்களும், சின்னங்களும், துவாரத்தை யுடைய சங்குகளும், கொம்புகளும்,