பக்கம் எண் :

சீறாப்புராணம்

1238


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், உத்தரீயத்தை மேலே யிருக்கும்படி செய்து அழகானது பிரகாசியா நிற்குஞ் சிறிய உடைவா ளென்று சொல்லும் கலிபினைப் பொருத்திய தோற்ற மானது, எனக்குப் பிரதி தினமுஞ் சத்துராதிகளாகிய காபிர்களின் ஆவியைப் பலியாகத் தாருங்களென்று சொல்லிப் பெரிய இரத்தினங்கள் பதித்த தனது கச்சின் கரங்களினால் மிகுத்த கீர்த்தியை யுடைய இடையிற் பொருந்தித் தடவுவதை நிகர்த்தது. 

 

3369. திருநபிக் கேவலி யானுஞ் செய்குவ னென்ன வெய்யோன்

     வெரிநிடத் துறைந்த போல விளங்குகே டகத்தைச் சேர்த்துச்

     சொரிகதிர் வயிர மாலைத் தோள்வரை யிடத்திற் றோன்றி

     யொருபிறை கிடந்த தென்னத் தனுவொரு புறத்திற் கொண்டார்.

18

      (இ-ள்) தெய்வீகந் தங்கிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்கு யானும் பணிவிடை செய்வே னென்று சொல்லிச் சூரிய னானவன் முதுகி னிடத்துத் தங்கினதைப் போலும் விளங்குகின்ற கேடயத்தைப் பொருந்தச் செய்து கிரணங்களைச் சிந்துகின்ற வயிர மணிகள் பதித்த மாலையைக் கொண்ட புயமாகிய மலையின் கண் ஒப்பற்ற சந்திரனானது தோற்ற மாகிக் கிடந்ததைப் போலும் ஒரு புறத்தில் கோதண்டத்தைத் தரித்தார்கள்.

 

3370. வெய்யவன் கதிரின் வேக விசையின வேத வாய்மை

     பையனுக் கொன்று நூறா யிரமென வமைந்த வேவல்

     செய்வன திகாந்த மட்டுஞ் செல்வன திறத்த வெண்ணில்

     பெய்சரக் காபூ றென்னுந் தூணிபிற் புறத்திற் சேர்த்தார்.

19

      (இ-ள்) அன்றியும், சூரியனது கிரணங்களின் வேகத்தைப் போன்ற விசையை யுடையனவும், வேதங்களின் உண்மையைக் கொண்ட கடவுளான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவுக்காக ஒன்று, நூறாயிர மென்று சொல்லும் வண்ணம் பொருந்திய பணிவிடைகளைச் செய்யப் பட்டனவும், திக்குகளின் முடிவு மட்டுஞ் செல்லப் பட்டனவு மாகிய வலிமையை யுடைய பொழிகின்ற கணக்கற்ற அம்புகளைக் கொண்ட காபூ றென்று சொல்லும் அம்பறாத் தூணியை முதுகினிடத்துப் பொருந்தும் வண்ணம் பூண்டார்கள்.

 

3371. மறுவிலு கைபத் தென்னு மரவயி ரத்திற் செய்த

     குறுசூனுத் தண்ட மேந்திக் குலக்கொழுந் தனைய கற்பிற்

     பொறைமயில் கதீசா வீந்த பொலன்மணி வேலுந் தாங்கி

     யிறைவனை வாழ்த்தி யேத்தி முகம்மது மெழுந்தா ரன்றே.

20