பக்கம் எண் :

சீறாப்புராணம்

1237


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) இரு புறத்து மதம்பாய்ச் சுவட்டின் வழியாகவும் மத நீரைப் பொழிந்து நிற்கும் யுத்தத் தொழிற் செய்கின்ற யானைக் கூட்டங்களைப் போலவும், புலிக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்ததைப் போலவும், மலையினிடத்து கிடந்து சீறா நிற்கும் ஆண் சிங்கத்தினது கூட்டங்களைப் போலவும், பரந்த சமுத்திரத்தை நிகர்த்த அந்தச் சேனைகள் சூழும் வண்ணம் அரசர்களாகிய அவர்கள் அவ்வாறு வந்து கூடி மொய்த்தார்கள்.

 

3366. திரைக்கடற் கடுப்ப வேந்தர் சேனைகொண் டீண்டத் தாவும்

     பரிக்குழா நெருங்கச் சேர்ந்த படைக்கலன் செறிந்து மின்ன

     மருக்கமழ் படலைத் திண்டோண் மலையென வளர வள்ள

     லருக்கனொத் தெழுந்து வெம்போ ரணிகல னணிய லுற்றார்.

15

      (இ-ள்) அலைகளை யுடைய சமுத்திரத்தைப் போலும் அரசர்கள் அவ்வாறு தங்களின் சேனைகளைக் கொண்டு வந்து கூடவும், பாய்கின்ற குதிரைக் கூட்டங்கள் செறியவும், செந்நிறத்தைக் கொண்ட யுத்தாயுதங்கள் மிடைந்து பிரகாசிக்கவும், வாசனையைப் பரிமளிக்கா நிற்கும் புஷ்ப மாலை யணிந்த திண்ணிய தோள்க ளானவை மலைகளைப் போலோங்கும் வண்ணம் வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சூரியனை நிகர்த் தெழும்பி வெவ்விய யுத்தத்தினது அழகிய ஆயுதங்களை அணியத் தொடங்கினார்கள்.

 

3367. தண்ணொளி விலகி வீசுஞ் சபூகெனுந் தலைச்சோ டிட்டு

     வெண்ணிலாக் கதிரின் கற்றை மின்னினைப் பொதிந்த தென்ன

     வண்ணவெண் சறுபாற் றொட்டு மருங்கினிற் சுருக்கி வீக்கிக்

     கண்ணொளி கவருஞ் சோதிக் கஞ்சுகி கவினச் செய்தார்.

16

      (இ-ள்) குளிர்ச்சி பொருந்திய பிரகாசத்தை இடைவிட்டெறியா நிற்குஞ் சபூ கென்று சொல்லுந் தலைச் சீராவைத் தலையின் கண் பூண்டு வெள்ளிய ஒளிவைக் கொண்ட கிரண தொகுதியினது மின்னலை மூடினதைப் போலும் அழகிய வெண்ணிறத்தை யுடைய சறுபா லாகிய சல்லடத்தை இடையிலணிந்து சுருக்கிக் கட்டி நேத்திரங்களின் பிரகாசத்தைக் கவருகின்ற பிரபையை யுடைய சட்டையை சரீரத்தினிடத்து அழகா யிருக்கும்படி தரித்தார்கள்.

 

3368. ஒலியல்மே லிருத்திச் செவ்வி யொளிருங்குற் றுடைவா ளென்னுங்

     கலிபினைச் சேர்த்த காட்சி கருதல ருயிரை நாளும்

     பலியெனக் கருள்வீ ரென்னப் பருமணிக் கச்சின் கையான்

     மலிபுகழ் மருங்கு சேர்ந்து வருடுவ போன்ற தன்றே.

17