பக்கம் எண் :

சீறாப்புராணம்

1236


இரண்டாம் பாகம்
 

தொழுகைக்கு இமா மென்று ஒழுங்கோடுஞ் செய்யா நிற்கும் செய்கையினது முறைமைகள் சிறக்கும் வண்ணஞ் சொல்லுகின்ற நன்மை பொருந்திய வேத சாஸ்திரங்க ளெல்லாவற்றையும் பொழிகின்ற நாவை யுடையவரான களங்க மற்ற இபுனும்மி மகுதூம் றலி யல்லாகு அன்கு அவர்களை முதன்மையாக வைத்தார்கள்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

3363. வீரவெண் மடங்க லென்னும் விறலபூ பக்கர் வேக

     மாருத மடங்கத் தாவும் வயப்பரி யுமறுஞ் சேந்த

     கூரயி றாங்குஞ் செங்கைக் கோவுது மானும் வெற்றித்

     தார்கெழும் வடிவா ளேந்துந் தடப்புய அலியும் வந்தார்.

12

      (இ-ள்) அவ்வாறு வைக்க, அங்கு வீரத்தையும் வெண்ணிறத்தையுங் கொண்ட சிங்க மென்று கூறும் வலிமையை யுடைய அபூபக்கர் சித்தீகு றலி அல்லாகு அன்கு அவர்களும், வேகத்தைப் பொருந்திய காற்றுங் கீழ்ப் படியும் வண்ணம் பாயா நிற்கும் வலிமையைக் கொண்ட குதிரையை யுடைய உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்களும், செந்நிறத்தை யுற்ற கூர்மைதங்கிய வேலாயுதத்தைச் சுமந்த சிவந்த கையை யுடைய அரசரான உதுமா னிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு அவர்களும், வெற்றி மாலை பொருந்திய கூரிய வாளாயுதத்தைத் தாங்கிய பெரிய தோள்களை யுடைய அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

 

3364. இயன்மறை தெரிமு காசி ரீன்களெண் பத்து மூன்று

     பெயருமன் சாரி மாரிற் பேர்பெறுந் தலைமை மிக்கோ

     ருயரிரு நூற்று முப்பத் தொருபெய ரவருங் கைவா

     ளயருறா வெற்றி வீரத் தவருட னீண்டி னாரால்.

13

      (இ-ள்) அன்றியும், இலக்கணத்தைப் பொருந்திய புறுக்கானுல் மஜீ தென்னும் வேதத்தை யுணர்ந்த முஹாஜிரீன்கள் எண்பத்து மூன்று பெயரும், அன்சாரிமார்களிற் கீர்த்தியைப் பெற்ற தலைமைத்தனத்தால் மிகுந்தவர்களான பெருமை தங்கிய நூற்றி முப்பத்தொரு பெயரும், கையி னிடத்துத் தாங்கிய வாளாயுதமானது தளர்வுறாத வெற்றியைக் கொண்ட வீரத்தை யுடைய தங்கள் சேனை யோடும் வந்து கூடினார்கள்.

 

3365. இருபுறக் கரட தாரை மதசல மிறைத்து நிற்கும்

     பொருகரிக் கணங்க ளென்னப் புலிக்குழாந் திரண்ட தென்ன

     வரையிடை கிடந்து சிறு மடங்கலேற் றினங்க ளென்ன

     விரிகடற் றானை சூழ வேந்தர்க டிரண்டு மொய்த்தார்.

14