பக்கம் எண் :

சீறாப்புராணம்

124


முதற்பாகம்
 

நன்மையுற்றவுங்கள் பிள்ளையினது பிள்ளை, ஆதலால் நமது இனத்தார் செய்துதந்த தபோபலன் போன்றுதித் தெழுந்த அப்பிள்ளையை நீங்களே சென்றெடுப்பீர்களாக; அதற்காக வீட்டினுள் பிரவேசியுங்களென்று சொன்னார்கள்.

 

     278. மருமலர் செறிந்து வண்டுகண் படுக்கு

             மஞ்செனுங் கருங்குழன் மடந்தை

        தருமுரை கேட்டு வெகுளியைப் போக்கிச்

             சசிமுக மலர்ந்தகங் குளிர்ந்து

        பருதியொத் திலங்கு மாளிகை புகப்போய்ப்

             பார்த்தனர் வாயிலு ளொருவ

        ருருவின கருவி கரத்தினி லேந்தி

             யுறுக்கிட வெருக்கொடு மீண்டார்.

113

     (இ-ள்) வாசனையையுடைய புஷ்பங்க ணிறைந்து வண்டுகளுறங்காநிற்கும் சூன்முதிர்ந்த மேகமென்று சொல்லும்படியான கரிய கூந்தலையுடைய பெண்ணாகிய ஆமினா அவர்கள் அருளிய அச்சொல்லை  அப்துல் முத்தலிபவர்கள் கேட்டுத் தங்களது கோபத்தை நீக்கிப் பூரணச்சந்திரன் போலு முகமானது மலர்ச்சியுற்று மனங்குளிர் தலையடைந்து சூரியனை நிகர்த்துப் பிரகாசிக்கும் மனைக்குட் பிரவேசிக்கும்படிப் போய்ப் பார்த்தார்கள். அப்போது அம்மனை வாசலுக்குள்ளொரு மனிதர் நின்றுகொண்டு உறையின் கண்ணின் றுருவின ஆயுதத்தைக் கையிற்றாங்கினவராய் அச்சுறுத்த; அதனாலிவர்கள் அச்சங்கொண்டு உள்ளே பிரவேசிக்காது திரும்பினார்கள். 

 

     279. மீண்டனர் பதறிக் காறடு மாறி

             விளைந்திடும் பயனையோ ராம

        லாண்டகை யிவனார் நம்மனை தனைவந்

             தடுப்பனோ தகாதென வெண்ணிப்

        பூண்டநம் மினத்தா ரனைவர்க்கு முரைத்துப்

             போக்குவ மிவனையா மென்னத்

        தூண்டியே நடந்து வாயிலைக் கடந்தார்

             துன்பமுற் றப்துல்முத் தலிபு.

114

     (இ-ள்) அங்ஙனம் பயந்து உள்ளே புகாது திரும்பிய அப்துல் முத்தலிபானவர்கள் திகைத்துக் கால்களிரண்டுந் தடுமாற்றமுற்றுத் திரும்பி இனி விளையும் பலனைச் சிந்தியாமல் ஆண்டன்மையை யுடையவனாகிய இவன் யாவன்! நமது மனையைவந்து சேர்வானா! தகுதியாகாதே என்று எண்ணிப் பொருந்திய நமது பந்துக்களனைவர்கட்குஞ் சொல்லி நாமிவனையிங்கிருந்து போகச் செய்வோமென்று மனதையெழுப்பி துன்பம் பொருந்தி நடந்து அந்த மனைவாசலைக் கடந்தார்கள்.