பக்கம் எண் :

சீறாப்புராணம்

1397


இரண்டாம் பாகம்
 

கொலைத் தொழிலைச் செய்கின்ற தமது சைனியங்களோடும் அரிதாக மனமானது துணியப் பெற்று நமது தீனுல் இஸ்லாமென்னும் மெய்மார்க்கத்தை யுடையவர்கள் பிரமிக்கும் வண்ணம் இங்கு வந்து பாசறை இட்டிறங்கினார்களென்றால் அவற்றை மறுதலித்துப் புத்தியில்லாமல் நாம் இவ்விடத்தில் தங்கியிருப்பது ஒழுங்கல்ல. 

 

3822. காத மாமெனத் தீமையர் பாசறை காண்டும்

     வாதி யாதிருந் தேமெனி லவமொழி வளருங்

     கோது றுமஃ தன்றியு முனைத்திறங் கோடு

     நீத மன்றிவ ணிருத்தல்போய்ப் பொருவது நினைவால்.

63

     (இ-ள்) நாம் பொல்லாங்கையுடையவர்களான அந்தக் காபிர்களது பாசறையை ஓர் காதவழி தூரமாமென்று சொல்லும்படிப் பார்த்தும் பேசாமலிருப்போமானால் அதனால் வீண் வார்த்தையானது அதிகரிக்கும். குற்றமும் வந்து சேரும். அஃதல்லாமலும் நமது யுத்தவலிமையுங் கோணும். ஆதலால் நாமிங்கிருப்பது நியாயமல்ல, எதிராகப் போய் அவர்களோடு போர் புரிவதே கருத்தாகும்.

 

3823. என்னு மிவ்வுரை யிறையவ னடியவ ரியம்ப

     மன்னு மாமறை முகம்மது கேட்டுள மகிழ்வுற்

     றன்ன தேகருத் தெனமொழிந் தினிதொடு மரிதிற்

     பொன்னு லாந்தடத் தாள்பெயர்த் தெழின்மனை புகுந்தார்.

64

      (இ-ள்) என்று கூறும் இந்த வார்த்தைகளைக் கடவுளான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தொண்டர்களாகிய அவர்கள் சொல்ல, பெருமை பொருந்திய புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தையுடைய நமது நாயகம் நபிகட்பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கேள்வியுற்று மனமானது சந்தோஷ மடையப் பெற்று அதுவே கருத்தென்று சொல்லி இனிமையோடும் அரிதிற் பொன்னைப் போலும் பிரகாசியா நிற்கும் தங்களது பெருமை தங்கிய சரணங்களைப் பெயர்த்து அழகிய வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3824. இல்லி டத்தினி லுறைந்தருஞ் செழுந்துகி லெடுத்து

     வில்லு மிழ்ந்தமெய் யிடத்தினி லழகுற விசித்துச்

     செல்லெ னுங்கரத் தாற்சிர சபூகினைத் திருத்தி

     யல்லெ னுந்திறக் கரும்பொற்கஞ் சுகியையு மணிந்தார்.

65

      (இ-ள்) அவ்வாறு போய்ச் சேர்ந்து வீட்டின்கண் தங்கி அருமையான செழிய வத்திரத்தை மேகமென்று சொல்லுங்