இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும்,
பரந்த திரைகளைப் போலக் கூட்டமாகிய வெள்ளிய சாமரைகளை வீசவும், கரியமேகத்தி னிடத்துப்
பொருந்தும் வண்ணங் கொடிக் கூட்டங்க ளசையவும், அந்தகார மற்ற சந்திரவட்டக் குடையானது எவ்விடத்தும்
பிரகாசிக்கவும், பூமியினிடங்களியாவும் இருட்சியை யுற்றதுபோல நிழலினது கூட்டங்களோங்கின.
4126.
வண்டுநற வுண்டிசை பயின்றுவளர் காவுந்
தண்டரு புனற்சிறை கிடந்ததட மற்றுங்
கண்டுபல சேனையொடு காணரிய தூதர்
கொண்டெழிலி லங்குசுகு றாவினை யடைந்தார்.
4
(இ-ள்) அவ்வாறு ஓங்க,
காண்பதற் கருமையான றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தேனீக்கள் மதுவையருந்தி இராகங்களைப் பாடிக் கொண்டு ஓங்கா
நிற்குஞ் சோலைகளையும், குளிர்ச்சியைத் தருகின்ற நீரானது சிறையாகக் கிடக்கப் பெற்ற தடாகங்களையும்,
மற்றவைகளையும் பார்த்துக் கொண்டு பலசைனியங்களோடும் அழகைப் பெற்றுப் பிரகாசியா நிற்குஞ்
சுகுறாவென்னும் நகரத்திற் போய்ச் சேர்ந்தார்கள்.
4127.
விண்ணினை யடர்ந்துகதிர் மேவவரி தாகி
மண்ணினி லுயர்ந்தபெரு மால்வரையை மானத்
திண்ணிய வெயிற்புறம் வளைந்தனர் சினத்துக்
கண்ணிய திரைக்கடல் பரந்தன கடுப்ப.
5
(இ-ள்) அவ்வாறு சேர்ந்து
ஆகாயத்தை நெருங்கிச் சூரிய சந்திரர்கள் பொருந்திச் செல்லுவதற் கருமையாகி இவ்வுலகத்தின்
கண் ஓங்கிய மிகவும் பெருமையான மலையை நிகர்த்த வலிமையைக் கொண்ட அவ்வூரினது கோட்டை மதிலின்
வெளிப்பக்கத்தைப் பெருமைபொருந்திய அலைகளையுடைய சமுத்திரமானது பரவியதைப் போலுங் கோபித்துச்
சூழ்ந்தார்கள்.
4128.
மாசற விளங்குதிறன் மன்னவரும் வெற்றி
பேசுமற மள்ளரொடு பெட்புற நடத்துங்
காசொளி பரப்புகலி னப்புரவி சுற்றுப்
பாசறை வகுத்தனர் படங்குக ணிரைத்தே.
6
(இ-ள்) அவ்வாறு சூழ்ந்து
குற்றமற விளங்கா நிற்கும் வெற்றியைக் கொண்ட அரசரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது
முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் விஜயத்தினாற் புகழா
|