இரண்டாம் பாகம்
முறைசீக்குப் படலம்
அறுசீர்க்கழிநெடிலடி
யாசிரிய விருத்தம்
4295.
இன்னகா ரணமியற்றி தீனின்மறை
முறையொழுகி யிருக்கு மெல்வை
நன்னிலைமை தவறாத சாரணரி
லொருவரவ ணணுகி நாளுந்
துன்னுதவ வானவர்க டொழுமரிய
வொளிவுருவாய்த் தோன்றி நின்றோ
யென்னுரைகேட் டருடியென விணையடியிற்
கரந்தாழ்த்தி யினைய சொல்வார்.
1
(இ-ள்) நமது நாயகம்
எம்மறைக்குந் தாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷியா காத்திமுல் அன்பியா
அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இத்தன்மையான காரணங்களைச்
செய்து தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தினது புறக்கானுல் அலீமென்னும் வேத ஒழுங்கில்
நடந்து அந்தத் திருமதினமா நகரத்தின்கண் ணிருக்கின்ற சமயத்தில், நல்ல சன்மார்க்கத்தை விட்டும்
வழுவாத தூதர்களில் ஒரு தூதரானவர் அங்கு வந்து பிரதி தினமும் நிறைந்த தவத்தைக் கொண்ட தேவர்களாகிய
மலாயிக்கத்துமார்கள் பணியா நிற்கும் அருமையான ஒளியினது வடிவமாய் அவதரித்து நின்ற நபிகட்
பெருமானே! எனது வார்த்தைகளைக் கேட்டருளுங்களென்று அவர்களது இருபாதங்களிலுந் தங்கள் கையைத் தாழ்த்திப்
பணிந்து இத்தன்மையான சமாச்சாரத்தைச் சொல்லுவார்கள்.
4296.
சேல்பாய மேதிவெருண் டோடவளை
யுடைந்துமுத்தஞ் சிந்திச் சோதிக்
கால்பாயுங் கரைத்தடஞ்சூழ் முறைசீகு
வெனுநகரிற் கணிப்பி லாத
வேல்பாய வடுச்சிறந்த திண்மைநல
மேனியர்கள் மேன்மேல் வென்றி
மால்பாய்ந்து கொண்டகுல முஸ்தலிகுக்
கூட்டமெனு மாந்தர் மன்னோ.
2
(இ-ள்) கெண்டை மீன்கள்
குதிக்க, அதனால் எருமைகள் பயந்து ஓட, அவ்வோட்டத்தினால் அவைகளின்
|