|
இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வாறு தோல்வியுற்ற
அவர்கள் தங்கள் சரீரமானது முழுகுகின்ற இரத்தத்தைக் கொப்பளிக்கவும், அடிகள் சிதையவுங் கண்களாற்
பின்னாற் பார்த்துக் கொண்டு ஓடினார்கள். தங்களது மனைவிமாரையும் பெற்ற புத்திரர்களையுந் திரவியங்களையுந்
தேடாமல் மலைகளையுங் காடுகளையுந் தேடினார்கள். வேந்தர்களான அசுஹாபிமார்கள் செம்மையான
புறுக்கானுல் மஜீதென்னும் வேதவசனங்களை யோதினார்கள். பயகாம்பரான நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சந்தோஷமடைந்தார்கள். பைசாசங்கள் அந்தப்
பாசறையினிடங்க ளெல்லாவற்றிலுங் கூத்தாடின. தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கமானது மகிழ்ச்சியடைந்தது.
விஜயமும் வீரமும் நடனம் பண்ணும் வண்ணம் யுத்தமானது விருப்பமுற்றது.
வேறு
4320.
போயாறினர் பயமொன்னலர் தசையுண்டு புகழ்ந்து
பேயாறின வழல்வெம்பசி கவினும்பிறழ் கண்ணின்
றீயாறின செருவாறின சினமாறவஞ் சினத்தின்
வாயாறினர் கையாறினர் தீனின்மறை வல்லோர்.
26
(இ-ள்) சத்துராதிகளாகிய
அந்தக் காபிர்கள் அவ்வாறு பின்காட்டி யோடிப்போய்த் தங்களது அச்சமானது தணியப் பெற்றார்கள்.
பைசாசங்கள் மாமிசங்களை யருந்தித் துதித்து வெப்பத்தைச் செய்கின்ற கொடிய பசியானது தணியப்
பெற்றன. பிறழுகின்ற அழகாயிருக்குங் கண்களின் நெருப்பானது தணிந்தன. அந்த யுத்தமானது தணிந்தன.
தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தைக் கொண்ட புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தில்
வல்லவர்களான அசுஹாபிமார்கள் தங்கள் கோபமானது தணியும் வண்ணம் சபத வார்த்தைகளைக் கூறுகின்ற
வாயானது ஓயப் பெற்றார்கள். கைகள் ஓயப் பெற்றார்கள்.
4321.
பவமுந்திய படிறும்வெகு பழியுந்திய கொலையு
மவமுந்திய மனவெங்குபி ரவர்வெண்கொடி யொளியிற்
றிவள்வெண்கொடை பலபன்மணி சிவிகைத்திர ளெல்லாந்
தவமுந்திய முசுலீமனர் கொண்டார்பறந் தலையின்.
27
(இ-ள்) அன்றியும்,
தவமானது ஓங்கப் பெற்ற முஸ்லிம்களாகிய அவ்வீரர்கள் அந்த யுத்தக்களத்தில் பாதகமானது வளரப்பெற்ற
வஞ்சகத்தையும் மிகுத்த நிந்தையானது வளரப் பெற்ற கொலைத் தொழிலையுங் கொண்ட வீண் விடயங்களில்
முதன்மைப் பட்ட இதயத்தை யுடைய வெவ்விய அந்தக்
|